சென்னை: அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற உலக கோப்பைக்கான கபடி விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற கபடி அணியில் பங்கேற்ற வீரர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் அறிவித்துள்ளார்.
அண்மையில் குஜராத்தில் உலக கோப்பை கபடி போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய அணி இறுதி போட்டியில் ஈரான் அணியை எதிர் கொண்டது. போட்டியின் முடிவில் 38-29 என்ற கணக்கில் இந்தியா ஈரானை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியில் தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீரர் சேரலாதன் முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும், கபடி அணியில் பங்கேற்று வெற்றிக்கு வித்திட்ட வீரர்களுக்கு தலா 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று விஜய் கோயல் தெரிவித்தார்.
இந்தியா இதுவரை 8 முறை உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.