
மரக்கானா மைதானம்
ரியோ டீ ஜெனிரோவில் உள்ள மரக்கானா ஸ்டேடியத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஃபிபா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி அந்த மைதானத்தில் தான் நடைபெற்றது. ஃபிபா இறுதி ஆட்டத்திற்காக அந்த மைதானம் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது ஒலிம்பிக் தொடங்குவதையொட்டி, மைதானம் மேலும் புனரமைக்கப்பட்டுள்ளது. அங்கு 78,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து விழாவை பார்க்க முடியும்.

ஒளிபரப்பு
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் இப்போட்டிகளை ஒளிபரப்பு செய்கிறது. போட்டிகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வர்ணனை செய்யப்படும்.

ஆன்லைனில் லைவ்
போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இணையதளமான starsports.com மற்றும் hoststar.com ஆகியவற்றில் நேரடியாக கண்டுகளிக்கலாம். தொடக்க விழா குறித்த விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அது குறித்து வெளியான சில தகவல்களை தற்போது பார்க்கலாம்.

நாட்டின் அணிவகுப்பு
ஒலிம்பிக் அணிவகுப்பில் கிரீஸ் நாடு முதலாவதாக அணிவகுக்கிறதாம். இந்தியா 95-வது நாடாக அணிவகுப்பில் பங்கேற்கிறதாம். ரியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி மூவர்ண தேசியக் கொடியை ஏந்திச் செல்வதற்காக, துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

5-வது முறையாக அபினவ் பிந்த்ரா
ஒலிம்பிக் போட்டியில் 5-வது முறையாக பங்கேற்கும் அபினவ் பிந்த்ராவுக்கு அந்தக் கௌரவத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கியுள்ளது.

தங்கம் வென்ற வீரர்
இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரான அபினவ் பிந்த்ரா, 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் விளையாட்டுப் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற அபினவ் பிந்த்ராவின் சாதனையை இதுவரை எவரும் முறியடிக்கவில்லை.

கடைசியில் பிரேசில்
ஒலிம்பிக்கை நடத்தும் பிரேசில் கடைசி நாடாக, அணிவகுப்பில் பங்கேற்கிறது. 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த ஒலிம்பிக்கில் மிக நீண்ட நேரம் அணி வகுப்பு நடைபெறவுள்ளது. குறிப்பிடும்படியாக, இந்த ஒலிம்பிக்கில் அகதிகள் அணியும் பங்கற்கிறது.

தொடக்க விழா
சிட்டி ஆப் காட் மற்றும் தி கான்ஸ்டன்ட் கார்டனர் போன்ற படங்களை இயக்கிய புகழ்பெற்ற பிரேசில் இயக்குநர் ஃபெர்னாண்டோ மெய்ரெலிஸ் தொடக்க விழாவில் இணைந்துள்ளார். தொடக்க விழாவின் போது சுமார் 300 நடன கலைஞர்கள், மற்ற உதவிகளுக்காக 5000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்
நாடுகளின் அணிவகுப்பு, அனைத்து நாடுகளின் கொடிகளை ஏற்றுதல், ஒலிம்பிக் தீப ஜோதியை ஏற்றுதல் என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறவுள்ளன. மேலும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெச் உரையாற்றவுள்ளார். இவற்றைக் காண சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அழகியே...
பிரேசில் மாடல் அழகியும், முன்னாள் விக்டோரியா சீக்ரட் மாடலுமான கிஸெலெ புஞ்செனின்(Gisele Bundche) நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. அது ரியோ டீ ஜெனிரோ மக்களின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சியாம். மேலும், திருநங்கை மாடல் அழகியான லியா டீ (Lea T.) நடத்தும் நிகழ்சியும் நடைபெறுகிறது.

சிங்கர் அனிட்டா
ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடகியான அனிட்டாவின் ( Anitta) நிகழ்சியும் உள்ளது. இதில், கேட்டனோ வேல்சோ (Caetano Veloso) கில்பெர்ட்டோ கில் (Gilberto Gil) ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

நாடுகளின் தலைவர்கள்
தொடக்க விழாவில் பல்வேறு நாட்டின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜென்டினா அதிபர் மவ்ரிக்கோ மாக்ரி, பிரஞ்சு அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே, இத்தாலி அதிபர் மாட்டீயோ ரென்சில், டச்சு அரசர் வில்லியம் அலெக்ஸாண்டர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவது பீலே
ஒலிம்பிக் ஜோதியை கால்பந்து ஜாம்பவான் பீலே ஏற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 75 வயதான கால்பந்து ஜாம்பவான் பீலே, மூன்று உலகக் கோப்பைகளை வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

90 கோடி மக்கள்
ரியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழாவினை உலகம் முழுவதும் இருந்து 90 கோடி மக்கள் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











