சென்னை: 2022ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகவும் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.
இதில் 185 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 11 சுற்றுகள் நடைபெற்ற நிலையில், ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கத்தையும், அர்மேனியா வெள்ளி பதக்கத்தையும், இந்தியா பி அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.
இதே போன்று மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப் பதக்கத்தையும், ஜார்ஜியா வெள்ளிப் பதக்கத்தையும்,இந்தியா ஏ அணியும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய பி அணிக்கும், மகளிர் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய சி அணிக்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு இரு அணிகளும் பெருமை சேர்த்ததை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றியாளர்களுக்கு வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். ஒரு அணியில் 5 வீரர்கள் இடம்பெற்று இருப்பார்கள். இதனால் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கும் தலா 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை பிரித்து வழங்கப்படும்.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுவரை மத்திய அரசு எவ்வித பரிசுத் தொகையும் வழங்கவில்லை. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் பிறகு சிறிய ஓய்வு எடுத்து கொள்ளும் வீரர்கள் அடுத்த தொடருக்கு தயாராகி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.