மும்பை : 2026 ஆம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியிலிருந்து கிரிக்கெட், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தம் போன்ற போட்டிகள் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.23வது காமன்வெல்த் போட்டி 2026 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரை முதலில் ஆஸ்திரேலியா நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம் அதிக செலவு ஏற்படுகிறது எனக் கூறி கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா பின் வாங்கி விட்டது.

இதனால் காமன்வெல்த் போட்டிகளை நடத்த ஸ்காட்லாந்து முன் வந்தது. ஆனால் தங்களாலும் அதிக அளவு நிதி ஒதுக்க முடியாது எனக் கூறி வெறும் 10 விளையாட்டுப் போட்டிகளை மட்டுமே நடத்த ஸ்காட்லாந்து முடிவு எடுத்தது. அதன்படி இந்த தொடரில் தடகளம், குத்துச்சண்டை, நீச்சல் பந்தயம், ஜிம்னாஸ்டிக், சைக்கிள் பந்தயம் பளுதூக்குதல், ஜூடோ 3 பேர் விளையாடும் கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளை மட்டுமே நடத்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
குறைந்த பட்ஜெட்டில் போட்டிகளில் நடத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக ஸ்காட்லாந்து தெரிவித்துள்ளது. இந்த தொடரில் 3000 வீரர்கள் 74 நாடுகளிலிருந்து பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு சாதகமான கிரிக்கெட் பேட்மிண்டன், மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகள் அனைத்தும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் 1966 காமன்வெல்த் விளையாட்டுக்குப் பிறகு பேட்மிண்டன் இல்லாமல் நடைபெறும் முதல் காமன்வெல்த் தொடராக இது இருக்கும். அது மட்டுமில்லாமல் ஸ்குவாஸ் மற்றும் ஹாக்கி 1998 காமன்வெல்த் போட்டியிலிருந்து தொடர்ந்து இடம்பெற்றிருக்கிறது. இதேபோன்று டேபிள் டென்னிஸ் விளையாட்டு 2002 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கம் உட்பட 61 பதக்கங்களை வென்றிருந்தது. இதில் மல்யுத்தத்தில் இந்தியா 12 பதக்கமும் பாக்சிங் மற்றும் டேபிள் டென்னிஸில் தலா 7 பதக்கமும், பேட்மிண்டனில் ஆறு பதக்கமும், ஹாக்கி மற்றும் ஸ்குவாசில் தலா இரண்டு பதக்கமும் கிரிக்கெட்டில் ஒரு பதக்கமும் என தற்போது நீக்கப்பட்ட விளையாட்டிலிருந்து மட்டும் இந்தியா மொத்தமாக 37 பதக்கங்களை வென்றிருந்தது.
தற்போது சேர்க்கப்பட்டிருக்கும் தடகளம் பாக்சிங் மற்றும் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு பெரிய அளவில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. தற்போது தான் கிரிக்கெட் ஒலிம்பிக் வரை சென்றுள்ள நிலையில் கிரிக்கெட் பிறந்த இடமான பிரிட்டன் நாட்டிலேயே காமன்வெல்த்தில் நீக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.