சென்னை: சென்னையில் இன்று தொடங்கிய 55 தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 5000 மீட்டர் ஓட்டத்தில், தமிழக வீராங்கனை சூர்யா, தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல 5000 மீட்டர் ஓட்டத்தில், தமிழக வீரர் லட்சுமணன், தங்கப்பதக்கம் வென்றார்.
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 55வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் நடத்தப்படுகிறது. 13ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 29 மாநிலங்களை சேர்ந்த முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
டின்டு லூக்கா, பூவம்மா, ராஜேந்திரசிங், ஜிப்சன் மேத்யூ உள்பட முன்னணி வீரர்-வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள். மொத்தம் 48 வகையான பந்தயங்கள் நடத்தப்படுகிறது. இந்த போட்டியின் அடிப்படையில் சீன தலைநகர் பீஜிங்கில் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும்.

73 தமிழக வீரர்கள்
தேசிய தடகள போட்டியில் 73 பேர் கொண்ட தமிழக அணி பங்கேற்கிறது. ஆண்கள் பிரிவில் பிரேம்குமார் (நீளம் தாண்டுதல்), ஆரோக்ய ராஜீவ் (400 மீட்டர் ஓட்டம்), லட்சுமணன் (5 ஆயிரம், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம்) உள்பட 42 பேரும், பெண்கள் பிரிவில் ஜி.காயத்ரி (100 மீட்டர் தடை ஓட்டம்), தீபிகா (100 மீட்டர், 100 மீட்டர் தடை ஓட்டம்), சுரேகா (போல்வால்ட்) உள்பட 31 பேரும் இடம் பிடித்துள்ளனர்.
தங்கம் வெற்ற தமிழக வீரார்கள்
இன்று காலை தொடங்கிய தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 5000 மீட்டர் ஓட்டத்தில், 16.01 விநாடி நேரத்தில் இலக்கை அடைந்த தமிழக வீராங்கனை சூர்யா, தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல 5000 மீட்டர் ஓட்டத்தில், தமிழக வீரர் லட்சுமணன், தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சொந்த மாநிலத்தில் போட்டிகள் நடைபெறுவதால் தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
தமிழக வீரர்களுக்கு சவால்தான்
பிப்ரவரி மாதம் கேரளாவில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டி மற்றும் மங்களூரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் தமிழக வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர். எனினும் உலக தடகளப் போட்டிகளுக்கு தகுதி பெற வேண்டிய இலக்கு சற்று கடினமாக இருக்கிறது. இது தங்களின் திறமைக்கு மீண்டும் ஒரு சவாலாக இருக்கும் என்றும் தமிழக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.