செஸ் ஒலிம்பியாட்டில் ஆச்சரியம்.. 8 வயது சிறுமி போட்டியில் பங்கேற்பு.. முதல் ஆட்டத்திலேயே கலக்கல்
சென்னை: 44 வது செஸ் ஒலிம்பியாட்டில் மிகவும் இளம் வயது போட்டியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பாலஸ்தீனை சேர்ந்த 8 வயதான வீராங்கனை செடர் ராண்டா.
செஸ் போட்டியில் பங்கேற்ற வயது ஒரு தடை இல்லை என்று கூறுவார்கள். 50 வயதுக்கு மேல் கூட செஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற வரலாறு உண்டு.

அவ்வளவு ஏன், நம் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா கூட தனது 12 வது வயதில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார்.
இதன் மூலம் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த நிலையில் உலகின் 186 நாடுகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போன்ற சர்வதேச தொடரில் ஒரு 8 வயது சிறுமி விளையாடுகிறார் என்றால் அது எவ்வளவு பெரிய பெருமை.
அதுவும், போராலும், அண்டை நாட்டு தாக்குதலாலும் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தில் இருந்த 8 வயது சிறுமி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தகுதி பெற்று இருக்கிறார் என்றால் அது நிச்சயம் சாதனை தான். செடர் ராண்டாவின் தந்தைக்கு செஸ் மிகவும் பிடிக்குமாம். அந்த வகையில், தந்தையிடம் கற்று கொண்டு பல்வேறு போட்டிகளில் செடர் ராண்டா வெற்றி பெற்று இருக்கிறார்.
செஸ் ஒலிம்பியாட் பாலஸ்தீன் மகளிர் அணியில் இடம்பெற்ற செடர் ராண்டா, தற்போது 2வது சுற்றில் களமிறங்கி தன்னை விட 12 வயது மூத்த வீராங்கனை ஃபஹிமா என்ற வீராங்கனையை வீழ்த்தி அசத்தி இருக்கிறார் செடர் ராண்டா. செட்ர் ராண்டா, களத்தில் இருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு செல்லப் பிள்ளையாகவும் மாறிவிட்டார்.


Click it and Unblock the Notifications