ராக்லா : போலந்து நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
போலந்து நாட்டின் ராக்லாவில் உலக கோப்பை வில்வித்தை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஆடவருக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவின் 3-வது கட்டத்தில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
சுதந்திர தினத்தன்று இந்தியாவுக்கு தங்கம் கிடைத்திருப்பது அனைவரிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் நாட்டு வீரர் இஸ்மாயில் எபாடிக்கு எதிராக விளையாடிய அபிஷேக் 148-145 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தங்கம் வென்றார். கடந்த 2014-ல் இன்சியோனில் நடைபெற்ற ஆசிய போட்டியில் தோற்கடித்ததை போலவே இந்த முறையும் எபாடியை அபிஷேக் தோற்கடித்திருக்கிறார்.
நாளை (ஞாயிற்றுக் கிழமை) மெக்ஸிகோ வீரர்களை எதிர்கொள்ளும் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி மற்றும் இந்திய வீரர் மங்கல் சிங் சாம்பியா ஆகியோர் மேலும் தங்கப்பதக்கங்களை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.