ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று காலை முதலே இந்திய வீரர்கள் தங்கம் உட்பட பல்வேறு 5 பதக்கங்களை வென்றுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10ஐ எட்டியுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று காலை முதலே இந்திய வீரர்கள் பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர். இன்று காலை தொடங்கிய துடுப்பு படகு பிரிவில் இரு வெண்கலம் பதக்கத்தை இந்திய வீரர்கள் வென்றனர். அதேபோல் துப்பாக்கிச்சுடுதலில் ஆடவர் அணி 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்று அசத்தியது. இது நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாகும்.

அதுமட்டுமல்லாமல் ருத்ரன்ஷ் பாட்டீல், திவ்யன்ஷ் பன்வார் மற்றும் ஐஸ்வரி தோமர் ஆகியோர் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளனர். இதுவரை 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் உலக சாம்பியன்ஷிப் தொடரின் போது சீனாவின் 1893.3 புள்ளிகளே அதிக புள்ளிகள் என்ற சாதனையாக இருந்தது. அதனை இந்திய அணி வீரர்கள் 1893.7 புள்ளிகள் பெற்று சீனாவின் சாதனையை முறியடித்துள்ளனர்.
இந்த நிலையில் அடுத்ததாக 25 மீட்டர் ரேபிட் ஃபையர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய ஆடவர் அணி வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. இந்தியாவின் அனித் பன்வாலா, விஜய்வீர் சித்து, ஆதார்ஷ் சிங் ஆகியோர் வெண்கலம் வென்று சாதித்துள்ளனர். அதேபோல் துப்பாக்கிச்சுடுதலில் 10 மீட்ட ஏர் ரைஃபிள் தனி நபர் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் வெண்கலம் வென்றுள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.