துபாய் : நடிகர் அஜித்குமார் தற்போது கார் பந்தயத்தில் பழைய மாதிரி காலடி எடுத்து வைத்து பட்டையை கிளப்பி வருகிறார். வாழ்க்கையில் நாம் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், நமக்கு பிடித்த விஷயங்களை தவறாமல் செய்து, அதில் சாதித்து காட்ட முடியும் என்பதற்கு அஜித் குமார் ஒரு ரோல் மாடலாக விளங்குகிறார்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்தும் ஒரு திரைப்படம் நடித்தாலே, 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்கும். அஜித்குமார் இரண்டு ஆண்டுக்கு ஒரு திரைப்படம் என்ற பாணியில்தான் நடித்து வருகிறார்.

துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித் குமார் சினிமா துறையில் இருந்து கொஞ்சம் கேப் எடுத்துக் கொண்டார். இந்த இடைப்பட்ட நேரத்தில் பைக் ரைடு செல்வது, பைக் ரைடுக்கு என ஒரு தனி நிறுவனத்தை தொடங்கியது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றது என நடிகர் அஜித் தமக்கு பிடித்த விஷயங்களை செய்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில்தான் நடிகர் அஜித் மீண்டும் தன்னுடைய ஆரம்ப காதலான கார் பந்தயம் மீது தனது பார்வையை திருப்பி இருக்கிறார். ஃபார்முலா கார் ரேஸ் வகைகள் இருந்து தற்போது நீண்ட நேரம் கார்களை ஓட்டும் என்டுரன்ஸ் ரேஸ் வகையில் அஜித் தற்போது கவனத்தை திருப்பி இருக்கிறார். அந்த வகையில் அஜித்குமார் ரேசிங் என்ற நிறுவனத்தை தொடங்கிய அவர் தனக்கென ஒரு அணியை கட்டமைத்து கடந்த ஆண்டு முழுவதும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.
தமிழக அரசின் உதவியுடன் நடிகர் அஜித் துபாயில் நடைபெற்ற 24 H எண்டுரன்ஸ் பந்தயத்தில் பங்கேற்றார். இதில் நடிகர் அஜித்குமார் குழு 992 பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது. பொதுவாக ஃபார்முலா 1 வகையிலான கார் பந்தயங்களுக்கு தான் கூட்டம் அலைமோதும். இந்த சூழ்நிலையில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கிறார் என்பதற்காக துபாயில் இருந்த தமிழக ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டியை பார்க்க அதிக அளவு சென்று குவிந்து இருக்கிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் இது போன்ற கூட்டம் இங்கு வந்ததே இல்லை என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் நடிகர் அஜித்தின் பந்தயக் குழுவை தங்களது நாட்டில் நடைபெறும் தொடரில் பங்கேற்க அழைப்புகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. இதனால் அஜித் ஐரோப்பா முழுவதும் நடைபெறும் பந்தயங்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி நடிகர் அஜித் தன்னுடைய அடுத்த போட்டியை இத்தாலியில் பங்கேற்கப் போகிறார். முகேலோ நகரில் மார்ச் 21 முதல் 23ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான பயிற்சி மற்றும் தகுதிச்சுற்று ஆகியவை மார்ச் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் இந்த தொடர் துபாய் போல் அல்லாமல் 12 மணி நேர போட்டியாக நடைபெறும்.