துபாய்: துபாயில் நடைபெற்ற 24 ஹவர் ரேஸிங் கார் பந்தயத்தில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. முதல் முறையாக கார் பந்தயத்தில் அஜித் குமார் வெற்றி பெற்றார். இதை அடுத்து அவர் தனது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் கார் பந்தய அணியினருக்கு மத்தியில் பேசினார்.
அப்போது மிகவும் கண்கலங்கிய நிலையில், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார் அஜித் குமார். இதுவரை அஜித் குமாரின் தனிப்பட்ட பக்கத்தை ரசிகர்கள் பார்த்ததில்லை. முதல் முறையாக அவர் ஒரு வாலிபரை போல இந்த கார் பந்தய வெற்றியை துள்ளி குதித்துக் கொண்டாடியதையும், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியதையும் பார்த்து ரசிகர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

அஜித் குமார் திரையுலகில் நடிக்க வந்ததற்கே பைக் ரேஸில் பங்கேற்க வேண்டும், அதற்கு பணம் வேண்டும் என்பதால்தான். இது திரையுலகில் அனைவரும் அறிந்த விஷயம் தான். பின்னர் அவர் கார் பந்தயத்திற்கு மாறினார். சில ஆண்டுகள் கார் பந்தயத்திலும் பங்கேற்றார். சில விபத்துக்கள் ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து கார் பந்தயங்களில் பங்கேற்க முடியவில்லை.
இடையே அவர் திரையுலகில் கவனம் செலுத்தி தீவிரமாக நடித்து வந்தார். தற்போது 53 வயதாகி விட்ட நிலையில் ஒரு கார் பந்தைய அணியை உருவாக்கி இருக்கிறார். இனி தொடர்ந்து அந்த அணியுடன் கார் பந்தயங்களில் பங்கேற்க இருப்பதாகவும் அறிவித்தார். அந்த அணி முதல் முறையாக துபாயில் நடைபெற்ற 24 ஹவர் கார் பந்தயத்தில் பங்கேற்றது.
அதில் 922 போர்ஷே பிரிவில் அவரது அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. தனது 53வது வயதில் தனது கார் பந்தய கனவு வெற்றி பெற்றதை அடித்து அஜித் குமார் உருக்கமாக பேசி இருந்தார். தனது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் கார் பந்தய அணியினருக்கு அவர் நன்றிகளை தெரிவித்தார்.
இதை ஊடகங்களில், இணையதளத்தில் பார்த்த ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சி அடைந்து, அவரை வாழ்த்தி வருகின்றனர். "இதற்குத் தானே ஆசைப்பட்டீர்கள் தல" என குறிப்பிட்டு அவரது வெற்றியை தங்களின் வெற்றியாக நினைத்து கொண்டாடி வருகின்றனர்.