துபாய்: நடிகர் அஜித் குமார் துபாயில் நடைபெற்று வரும் 24 ஹவர் கார் பந்தயத்தில் தனது நிறுவனத்தின் அஜித் குமார் ரேஸிங் அணியுடன் பங்கேற்று இருக்கிறார். இந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது.
அதில் அவர் காயம் இன்றி தப்பினார். அதன் பின்னும் அவர் தொடர்ந்து கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி அஜித் குமார் இந்த கார் பந்தயத்தில் இரண்டு பொறுப்புகளை எடுத்துக் கொள்ள இருக்கிறார்.

அவரது அணிக்காக இனி அஜித் கார் ஓட்ட மாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தின் கமிட்டி இது குறித்து ஆராய்ந்து 24 ஹவர் பிரிவு கார் பந்தயத்தில் பங்கேற்கும் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதோடு அஜித் குமார் ரேஸிங் இன் உரிமையாளராக இருக்கும் அஜித் குமார் தொடர்ந்து கார் ஓட்டி அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அது அவரது அணியை பாதிக்கும் என்ற முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
எனவே, அஜித் குமார் ரேஸிங்கை சேர்ந்த 901 என்ற காரை இனி அவர் ஓட்ட மாட்டார் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம் ஆஸ்ட்ரிய நாட்டை சேர்ந்த ரசூன் என்ற கார் நிறுவனத்தில் அவர் ஓட்டுனராக செயல்பட உள்ளார். அந்த நிறுவனம் வேறு பிரிவில் கார் பந்தயத்தில் பங்கேற்று உள்ளது.
ரசூன் நிறுவனத்தின் 414 என்ற எண் கொண்ட காரை அஜித் குமார் ஓட்ட இருக்கிறார். அஜித் குமார் பங்கேற்பதால் இந்த கார் பந்தயத்திற்கு அதிக அளவிலான ரசிகர்கள் கிடைத்து இருப்பதால் 24 ஹவர் துபாய் கார் பந்தய ஒருங்கிணைப்பாளர்கள் இந்த முடிவை வரவேற்று உள்ளனர். அஜித் குமார் அவரது நிறுவனத்திற்கு கார் ஓட்டாவிட்டாலும், மற்றொரு நிறுவனத்துக்காக காரை ஓட்ட உள்ளதை அவர்கள் வரவேற்று உள்ளனர்.
அஜித் குமார் இனி கார் ஓட்ட மாட்டார் என சனிக்கிழமை அன்று காலையில் வெளியான செய்திகளால் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். ஆனால், தற்போது அவர் வேறு காரை ஓட்ட உள்ள தகவலை அறிந்து மகிழ்ச்சியில் உள்ளனர்.