
கொலம்பியா தோல்வி
1994ம் ஆண்டு அமெரிக்காவில் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டித்தொடர் நடைபெற்றது. அப்போது அமெரிக்காவும், கொலம்பியாவும் மோதிய போட்டியில், 2-1 என்ற கணக்கில் கொலம்பியா தோற்றது.

சேம் சைடு கோல்
இந்த போட்டியின்போது அமெரிக்க வீரர்கள் கொலம்பிய கோல்கம்பத்தை நோக்கிய அடித்த பந்தை, தடுக்க முற்பட்டபோது, அது ஆண்ட்ரேஸ் எஸ்கோபர் காலில் பட்டு, சேம்சைடு கோலாகிவிட்டது.

கோல் போட்டவர் படுகொலை
இந்த போட்டியில் கொலம்பியா தோற்றதால் போட்டித்தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், ஒரு வாரம் கழித்து கொலம்பியாவில் காரில் சென்று கொண்டிருந்த ஆண்ட்ரேஸ் எஸ்கோபர், மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சேம் சைடு கோல் அடித்த கோபத்தில் கொலம்பியாவை சேர்ந்த ரசிகர்களில் யாரோதான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்பட்டது.

குடும்பத்துக்கு கவுரவம்
இந்நிலையில், சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் கழித்து, ஆண்ட்ரேஸ் எஸ்கோபரின் குடும்பத்தாரை கவுரவிக்க முடிவு செய்த கொலம்பிய கால்பந்து சங்கம், இன்று பிரேசிலுடன், கொலம்பியா மோதும், காலிறுதி போட்டியை பார்க்க, ஆண்ட்ரேஸ் குடும்பத்தாருக்கு, சிறப்பு அழைப்புவிடுத்துள்ளது.

பெருமை
இதையொட்டி பிரேசில் வந்திருந்த ஆண்ட்ரேசின் அக்கா, மரியா ஈஸ்டர் எஸ்கோபர் கூறுகையில், "எனது தம்பிதான் எங்கள் குடும்பத்தின் பெருமை, மகிழ்ச்சி" என்றார்.

சகோதரன் நினைவு திரும்பியது..
மற்றொரு சகோதரி, ஜோஸ் கூறுகையில் "எனது தம்பியை ரசிகர்கள் நினைத்து வருத்தப்பட வேண்டாம் என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் கால்பந்தில் தனக்கென முத்திரை பதித்த ஒரு வீரரை மக்கள் மறப்பது எளிதானது இல்லை. இந்த உலக கோப்பையின் முதலாவது போட்டியில் குரோசியாவுக்கு எதிராக பிரேசில் வீரர் மார்சிலோ சேம்சைடு கோல் போட்டார். அப்போது எனது சகோதரன் நினைப்புதான் எனக்கு வந்தது.

வாழ்க்கை இதோடு முடிவதில்லை
எனது தம்பி இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, எழுதிய, 'வாழ்க்கை இதோடு முடிவதில்லை' என்ற வரிதான் எங்களுக்கு ஊக்க சக்தியாக இருக்கிறது. எனவேதான், கால்பந்தாட்டத்திலிருந்து எங்கள் உறவை நாங்கள் துண்டித்துக்கொள்ளவில்லை" என்றார்.

அன்பால் இணையட்டும்
சகோதரிகள் இருவருமே ஒரு விஷயத்தைதான் வலியுறுத்துகிறார்கள். "விளையாட்டில் வன்முறைக்கு இடமில்லை. பேஷனோடு கால்பந்தாட்டத்தை மக்கள் ரசிக்க வேண்டும். இது ஒரு விளையாட்டு மட்டுமே என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். உலகத்தை அன்பால் இணைக்கும் கருவியாக கால்பந்தாட்டம் மாற வேண்டும்" என்பதுதான் சகோதரிகளின் கண்ணீர் தோய்ந்த வார்த்தைகளில் இருந்து வெளிப்படும் உண்மை.


Click it and Unblock the Notifications











