வெள்ளத்தில் ஏராளமானோர் பாதிப்பு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், அசாம் மற்றும் பீகாரில் மழை, வெள்ளம் மற்றும் அதைதொடர்ந்த நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் உயிர் மற்றும் உடமைகளை இழந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
விராட், அனுஷ்கா நிதியுதவி
இந்நிலையில் இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்து நிதியுதவி அளித்துள்ளனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வெள்ள நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஆக்ஷன் எய்ட் இந்தியா, ராபிட் ரெஸ்பான்ஸ் மற்றும் கூன்ஜ் ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களுக்கு கோரிக்கை
மேலும் இந்த நெருக்கடியான நேரத்தில் அந்த மாநிலங்களுக்கு இந்த தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதியுதவி அளிக்க தங்களது ரசிகர்களுக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் நிதியுதவி தங்களது பணி மேலும் சிறக்க காரணமாக அமைந்துள்ளதாக ரேபிட் ரெஸ்பான்ஸ் நிறுவனம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பீகாரில் 40 லட்சம் பேர் பாதிப்பு
நீடித்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அசாமில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 6 பேரும் மற்ற சம்பவங்களில் 107 பேரும் உயிரிழந்துள்ளனர். இதேபோல பீகாரில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.