சென்னை: கோவை தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு அசத்தல் பாடலை உருவாக்கியதைப் போல, டெல்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கும் சிறப்புப் பாடலை உருவாக்குகிறார் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கோவையில் நடைபெறும் உலக செம்மொழி மாநாட்டுக்காக 30 பின்னணி பாடகர்களை வைத்து புதிய பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் இந்தப் பாடலைச் சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழக அரசு. இந்த நிலையில், டெல்லியில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான பிரத்யேகமான பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்குகிறார். பிரபல பின்னணி பாடகர்கள் இப்பாடலைப் பாட உள்ளனர். விளையாட்டு போட்டிகள் துவங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே இந்த பாடல் வெளியீட்டு விழாவை பாலிவுட் நடிகர்-நடிகைகளை அழைத்து வெளியிட முடிவு செய்துள்ளனர். காமன்வெல்த் விளையாட்டு போட்டி துவக்க விழாவிலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.