
ரிதுவர்ஷினி
உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர், கலப்புக்குழு மற்றும் மகளிர் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றனர். குறிப்பாக மகளிருக்கான காம்பவுண்ட் கேடட் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பிரணீத் கவுர், பிரியா குர்ஜார் மற்றும் ரிதுவர்ஷினி செந்தில்குமார் ஆகிய மூவரும் இறுதிச்சுற்றில் 228-216 என்ற புள்ளிகள் கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றனர். இவர்கள் மூவரும் தகுதிச் சுற்றில் அணியாக மொத்தமுள்ள 2160 புள்ளிகளுக்கு 2067 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தனர். இந்தப் பிரிவில் அமெரிக்க வீராங்கனைகள் 2045 புள்ளிகள் பெற்றதே முந்தைய உலக சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை இந்திய வீராங்கனைகள் முறியடித்தனர்.

15 பதக்கம்
இந்திய வீராங்கனை பிரியா குர்ஜார், குழுவு பிரிவுக்கான தகுதிச்சுற்றில் புதிய உலக சாதனைப் படைத்திருந்தார். ஆனால் தனிநபர் பிரிவில் அவரால் வெள்ளிப்பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்தது. இறுதி சுற்றில் சேலின் ரோட்ரிக்யிஸிடம் 136 - 139 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்தார். இதே போல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பன்ரீத் இங்கிலாந்தின் ஹாலீ ,போல்டன் என்பவரை 140 - 135 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன் மூலம் இறுதியில் இந்தியா 15 பதக்கங்களை கைப்பற்றியது.

உற்சாக வரவேற்பு
இந்நிலையில், போலந்தில் இருந்து நாடு திரும்பிய வில்வித்தை வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பாராட்டு தெரிவித்தார். பின்னர் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் முலம் வந்த ரிதுவர்ஷினியை விமான நிலையத்தில் தமிழ்நாடு வில்வித்தை சங்க செயலாளரும் இந்திய வில்வித்தை பயிற்சியாளர்கள் இயக்குனருமான ஷிஹான் ஹூசைனி மற்றும் வில்வித்தை வீரர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். அப்போது ஹுசைனி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'முதல்முறையாக உலக வில்வித்தை போட்டி போலந்து நாட்டில் நடந்தது. அந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ரிதுவர்ஷினி உலக சாம்பியன் பட்டத்தை பெற்று இருக்கிறார். இது இந்தியாவிற்கு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கும் பெருமையாகும். ரிதுவர்ஷினிக்கும், அவரது பெற்றோருக்கும் பயிற்சியாளருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.

அடுத்த இலக்கு
தங்கப்பதக்கம் பெற்ற ரிதுவர்ஷினி பேசுகையில், "சர்வதேச போட்டியில் இது தான் எனது முதல் வெற்றி. என்னுடைய வெற்றிக்கு நான் மட்டுமின்றி நிறைய பேரின் உழைப்பும் காரணமாகும். உலக இளையோர் போட்டியில் வெற்றி பெற்றது போல் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பட்டத்தை வெல்ல ஆசைப்படுகிறேன். கடுமையான சவாலுக்கு மத்தியில் அரையிறுதிப்போட்டியில் இத்தாலியை வென்றோம். இறுதிப்போட்டியில் துருக்கியை வீழ்த்தினோம்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











