ஜெருசலேம்: ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில், இந்தியாவின் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி, இளம் வீரர் அர்ஜுன் எரிகைசி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த உலகக்கோப்பையில் ஏமாற்றமடைந்த அர்ஜுனுக்கு, இந்த வெற்றி மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
இஸ்ரேலில் நடைபெற்ற இந்தத் தொடர் முழுவதும் இந்திய வீரர்களின் ஆதிக்கமே இருந்தது. இறுதிப்போட்டி ஒரு "ஆல்-இந்தியன் ஃபைனலாக" அமைந்தது. அதாவது இறுதிப் போட்டியில் மோதிய இருவருமே இந்திய வீரர்களான விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அர்ஜுன் எரிகைசி.

குருவும் சிஷ்யனும் மோதியது போல அமைந்த இந்த இறுதிப்போட்டி அவ்வளவு எளிதாக முடிந்துவிடவில்லை. முதல் இரண்டு 'ரேபிட்' சுற்றுகளும் டிராவில் முடிந்தன. இரு வீரர்களும் மாறி மாறி சில தவறுகளைச் செய்தாலும், வெற்றியை விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க 'டை-பிரேக்கர்' (Tie-breaker) முறை கடைபிடிக்கப்பட்டது.
முதல் 'பிளிட்ஸ்' (Blitz) ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி, 45 நகர்வுகளில் ஆனந்தை வீழ்த்தி வெற்றிக்கனியைப் பறித்தார். இந்த வெற்றியின் மூலம் அர்ஜுன் எரிகைசிக்கு 55,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46 லட்சம்) பரிசாகக் கிடைத்தது.
வெற்றிக்குப் பிறகு பேசிய அர்ஜுன், "இது நிச்சயமாக எளிதான வெற்றி அல்ல. நிறையச் சவால்கள் இருந்தன. ஆனந்த் சாருடன் விளையாடிய இரண்டு போட்டிகளுமே மிகவும் பதற்றமாக இருந்தன. முதல் ஆட்டத்தில் நாங்கள் இருவருமே வாய்ப்புகளைத் தவறவிட்டோம். பிளிட்ஸ் சுற்றில் நான் நன்றாக விளையாடினேன்.
ஆட்டத்தின் நடுவே நான் வெற்றிபெறும் நிலையில் இருந்தபோது சொதப்பிவிட்டேன் என்று பயந்தேன். ஆனால் போராடித் திரும்ப வேண்டும் என்று நினைத்தேன், அது நடந்தது மகிழ்ச்சி" என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்.
கடந்த மாதம் கோவாவில் நடந்த செஸ் உலகக்கோப்பையில், காலிறுதிச் சுற்றில் வேய் யி (Wei Yi) என்பவரிடம் தோல்வியடைந்து அர்ஜுன் வெளியேறினார். அந்த ஏமாற்றத்தை ஜெருசலேம் மாஸ்டர்ஸ் வெற்றி மூலம் அவர் ஈடுசெய்துள்ளார்.
முன்னதாக அரையிறுதியில் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யாவின் இயன் நெபோம்னியாட்சியை (Ian Nepomniachtchi) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அர்ஜுன், பீட்டர் ஸ்விட்லரை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.