கோலியை கைது செய்யணும்.. ஆன்லைன் சூதாட்டத்தை எதிர்த்து வழக்கு.. இளைஞர் பலியான விவகாரத்தில் பரபரப்பு!
சென்னை : கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்து இருக்கின்றனர்.
Recommended Video
அதை சுட்டிக் காட்டி அவர்களை கைது செய்ய வேண்டும் என ஒரு வழக்கில் கோரப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அவர்களை கைது செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம்
இந்தியாவில் மக்கள் நேரடியாக சூதாட்டத்தில் ஈடுபட தடை உள்ளது. ஆனால், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் இதற்கென ஏராளமான ஆப்கள் உள்ளன. ரம்மி, கிரிக்கெட் என பல வகையான சூதாட்டங்கள் ஆன்லைனில் கொடி கட்டி பறந்து வருகின்றன.

பிரபலங்கள்
அந்த ஆன்லைன் சூதாட்டங்களின் விளம்பரங்களில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தை யார் வேண்டுமானாலும் சில நிமிடங்களில் பணம் கட்டி ஆடலாம் என்ற நிலை உள்ளது. அதில் பல இளைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.

இளைஞர் தற்கொலை
அப்படி சென்னையை சேர்ந்த இளைஞரான விக்னேஷ் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார். இதை சுட்டிக் காட்டி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

ஆன்லைன் சூதாட்டம் அதிகரிப்பு
சூரியபிரகாசம் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். நேரடி சூதாட்டம் நடத்த தடை உள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்து வருவதாகவும், அதற்கு இளைஞர்கள் அடிமையாகி வருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார் அவர்.

புளூவேல் தடை
புளூவேல் விளையாட்டுக்கு அடிமையாகி இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து உயர்நீதிமன்றம் அந்த விளையாட்டுக்கு தடை விதித்து இருப்பதை சுட்டிக் காட்டி உள்ள அவர், அதே போல் தற்கொலை அதிகரிக்க காரணமாக இருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தையும் தடை செய்ய வேண்டும் என கோரி உள்ளார்.

கைது செய்யவும்
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் பிரபலங்களை நடிக்க வைத்து இளைஞர்களை மூளை சலவை செய்வதாக குற்றச்சாட்டை வைத்துள்ள அவர், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யவும் கோரி இருக்கிறார்.

அவசர வழக்கு
இந்த மனுவை அவசர வழக்காக கருத வேண்டும் என மனுதாரர் கோரி உள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு வரும் செவ்வாய் அன்று விசாரணைக்கு வர உள்ளது. கோலி, தமன்னா பெயரை சேர்த்துள்ளதால் இந்த வழக்கு பரபரப்பாக மாறி உள்ளது.

சிக்கும் பிரபலங்கள்
இதற்கு முன்பும் பல முறை பிரபலங்கள் விளம்பரங்களில் நடித்த காரணத்தால் வழக்குகளில் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இதுவரை எந்த பிரபலமும் அதற்காக கைது செய்யப்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications