தகுதி இருந்தும் வாய்ப்பு இல்லை.. நீதிமன்றம் ஏறி போராடித் தோற்ற தங்கமங்கை சித்ரா!!
சென்னை : ஆசிய தடகளப் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.யூ.சித்ரா மகளிர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தினார். ஆனால், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் இந்த வெற்றிக்குப் பின், பல சோகக் கதைகள் உள்ளன.
2017ஆம் ஆண்டு நடந்த ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றிருந்த சித்ரா, தற்போது மீண்டும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த முறை மூன்று இந்தியர்கள் மட்டுமே தங்கம் வென்ற நிலையில், அதில் சித்ராவும் ஒருவர்.

கேரளா மாநிலம் பாலக்கோட்டை சேர்ந்தவர் சித்ரா. அவரது குடும்பம் ஏழ்மையானது. அவரது தந்தை விவசாயக் கூலித் தொழிலாளி. இந்தக் கடின சூழ்நிலையிலும் கடும் பயிற்சி செய்து வந்த சித்ராவிற்கு 2017ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
2017 ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்காத நிலையில், நீதிமன்றத்தை நாடினார் சித்ரா. கேரளா உயர்நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
எனினும், ஐஏஏஎஃப் வீரர்கள் தேர்வுக்கான நேரம் முடிந்ததை காரணம் காட்டி இந்திய வீரர்கள் குழுவில் மாற்றம் செய்ய மறுத்துவிட்டது. தற்போது அந்த சிக்கல் இன்றி ஆசிய தடகளப் போட்டியின் தங்கத்தால் நேரடியாக உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இந்தியாவில் நீதியை போராடித் தான் பெற வேண்டும். அதுவும் தாமதமாகத்தான் கிடைக்கும். சித்ராவும் அதற்கு விதிவிலக்கல்ல!


Click it and Unblock the Notifications