
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 400மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
ஆடவர் 400மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் தருண் அய்யாசாமி மற்றும் சந்தோஷ்குமார் தமிழரசன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் இருவருமே தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் தருண் அய்யாசாமி போட்டி தூரத்தை 48.96 வினாடிகளில் கடந்து தேசிய சாதனையை முறியடித்தார். அது மட்டுமில்லாமல், ஆடவர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தை 49 வினாடிகளுக்கும் குறைவாக முடித்த முதல் இந்தியரும் இவரே.
இந்த போட்டியில் கத்தாரின் சம்பா 47.66 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். மூன்றாம் இடத்தை ஜப்பானின் அபே 49.12 வினாடிகளில் கடந்து பிடித்தார். மற்றொரு தமிழக வீரர் சந்தோஷ்குமாருக்கு ஐந்தாம் இடமே கிடைத்தது.
மேலும், பல தடகள போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இதுவரை 38 பதக்கங்களை வென்றுள்ளது.