ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆறாம் நாளான இன்று இந்தியா தன் 19வது பதக்கத்தை வென்றுள்ளது. துடுப்புப் படகுப் போட்டியில் லைட்வெயிட் ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் துஷ்யந்த் வெண்கலம் வென்றார்.
இந்த துடுப்புப் படகுப் போட்டியில் கொரியாவின் பார்க் ஹையுன்சு முதல் இடத்தையும், ஹாங்காங்கின் ச்யு ஹின் சுன் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். துஷ்யந்த் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் துஷ்யந்த் வெண்கலம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு இது பத்தொன்பதாவது பதக்கமாகும்.
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
ஆறாம் நாளான இன்று இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது தான். இந்தியா 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலம் வென்றுள்ளது. இதில் துப்பாக்கி சுடுதலில் ஏழு பதக்கங்கள், மல்யுத்தத்தில் மூன்று பதக்கங்கள், கபடியில் ஒரு பதக்கம், துடுப்புப் படகுப் போட்டியில் ஒரு பதக்கம், செபக்டக்ராவ்-இல் ஒரு பதக்கம், டென்னிஸில் ஒரு பதக்கம், வுஷுவில் நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளது.