ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆறாம் நாளான இன்று துடுப்புப் படகுப் போட்டியில் இந்தியா தன் இரண்டாவது வெண்கலத்தை வென்றுள்ளது. லைட்வெயிட் ஆடவர் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவில் இறுதிச் சுற்றில் பங்கேற்ற இந்தியாவின் ரோஹித் குமார், பகவான் சிங் வெண்கலம் வென்றனர்.
இந்த துடுப்புப் படகுப் போட்டியில் ஜப்பான் இணை முதல் இடத்தை பிடித்து தங்கத்தையும், கொரியா இணை இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியையும், இந்தியாவின் ரோஹித் குமார், பகவான் சிங் இணை மூன்றாம் இடம் பிடித்து வெண்கலத்தையும் வென்றனர். இந்தியாவுக்கு இது இருபதாவது பதக்கமாகும்.
ஆறாம் நாளான இன்று இந்தியாவுக்கு இதுவரை இரண்டு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளது. இந்தியாவின் துஷ்யந்த் ஆடவர் ஒற்றையர் துடுப்புப் படகுப் போட்டியில் வெண்கலம் வென்றார். இந்தியா 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் வென்றுள்ளது.
இதில் துப்பாக்கி சுடுதலில் எட்டு பதக்கங்கள், மல்யுத்தத்தில் மூன்று பதக்கங்கள், கபடியில் ஒரு பதக்கம், துடுப்புப் படகுப் போட்டியில் இரண்டு பதக்கங்கள், செபக்டக்ராவ்-இல் ஒரு பதக்கம், டென்னிஸில் ஒரு பதக்கம், வுஷுவில் நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளது.