ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் ஒன்பதாவது பதக்கத்தை வென்றது இந்தியா. 10மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் இன்று நடந்த இறுதிச் சுற்றில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் வென்றார்.
இந்த இறுதிச் சுற்றில் சீனாவின் வாங் கியான் 240.3 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், கொரியாவின் கிம் மிஞ்ஜூங் 237.6 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட ஹீனா சித்து 219.2 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடமும், மானு பாகர் 176.2 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடமும் பிடித்தனர்.
இதில் மானு பாகர் மேல் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் இடம் பிடித்து அசத்திய ஹீனா சித்து வெண்கலம் வென்றார். இந்தியாவுக்கு இது இருபத்தி மூன்றாவது பதக்கமாகும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆறாம் நாளான இன்று இதுவரை ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் ஒரு தங்கமும், துடுப்புப் படகுப் போட்டியில் ஆடவர் நால்வர் ஸ்கல்ஸ் பிரிவில் ஒரு தங்கமும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் துஷ்யந்த் ஒரு வெண்கலமும், ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோஹித் குமார், பகவான் சிங் இணை ஒரு வெண்கலமும் வென்றனர்.
2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை 23 பதக்கங்கள் வென்றுள்ளது. ஆறு தங்கம், நான்கு வெள்ளி, பதிமூன்று வெண்கலம் பெற்று பதக்கப் பட்டியலில் ஏழாவது இடத்தில இருக்கிறது.
இதில் துப்பாக்கி சுடுதலில் ஒன்பது பதக்கங்கள், மல்யுத்தத்தில் மூன்று பதக்கங்கள், துடுப்புப் படகுப் போட்டியில் மூன்று பதக்கங்கள், டென்னிஸில் இரண்டு பதக்கங்கள், வுஷுவில் நான்கு பதக்கங்கள், கபடியில் ஒரு பதக்கம், செபக்டக்ராவ்-இல் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.