ஆசிய விளையாட்டு : பிரிட்ஜ் விளையாட்டில் முதல் தங்கம்… சீட்டுக்கட்டிலும் சாதித்த இந்தியா
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பிரிட்ஜ் என்ற சீட்டுக்கட்டு விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. அந்த விளையாட்டில் இந்தியா சார்பாக ஆடவர், மகளிர் மற்றும் கலப்பு பிரிவுகளில் தனி, இணை, குழு என பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர்.
ஏற்கனவே, பிரிட்ஜ் ஆடவர் அணி மற்றும் கலப்பு அணி பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியா, தற்போது ஆடவர் இணை பிரிவில் தங்கம் வென்றுள்ளது. 56 வயதான ஷிப்நாத் சர்க்கார் மற்றும் 60 வயதான பிரணாப் பர்தன் ஆடவர் இணை இறுதியில் விளையாடினர்.

இந்த இறுதியில் 384 புள்ளிகள் பெற்று இந்தியா வென்றது. இரண்டாம் இடத்தை சீனா பிடித்தது. மூன்றாம் இடத்தை இந்தோனேசியா, ஹாங்காங் பகிர்ந்து கொண்டது.
இந்தியாவுக்கு இது 15வது தங்கப் பதக்கமாகும். இந்தியா ஒரே ஆசிய விளையாட்டில் வென்ற அதிக பட்ச தங்கம் 15 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்னும் ஒரு தங்கம் வென்றாலும் இந்தியாவின் சிறந்த ஆசிய விளையாட்டு தொடராக தற்போது நடந்து வரும் ஆசிய விளையாட்டு மாறும். இந்தியா இன்று ஸ்குவாஷ் இறுதியில் ஆட உள்ளதால், அதில் தங்கம் வெல்லுமா என பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications