ஆசிய விளையாட்டு: ஆடவர் கபடியில் இந்தியா, ஈரானிடம் அதிர்ச்சித் தோல்வி...வெண்கலம் மட்டுமே கிடைத்தது
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கபடி அணி அரையிறுதியில் ஈரானிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. கபடி ஆசிய விளையாட்டில் சேர்க்கப்பட்டது முதல் இந்திய அணி தங்கம் வென்று வந்துள்ளது. இந்த நிலையில், முதன் முறையாக தங்கம் இல்லாமல் நாடு திரும்ப உள்ளது.
இன்று நடந்த அரையிறுதியில், ஈரான் அணியோடு மோதியது இந்திய அணி. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கேப்டன் அஜய் தாக்குர் காயம் காரணமாக வெளியேற, இந்திய அணி 18-27 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தது.

ஆசிய விளையாட்டில் ஏழு முறை தங்கம் வென்ற இந்திய ஆடவர் கபடி அணி, தன் முதல் தோல்வியை தென் கொரியாவிற்கு எதிராக பதிவு செய்து இருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது அரையிறுதியிலும் தோற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தோல்வியின் மூலம் இந்தியாவிற்கு ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு இது பதினெட்டாவது பதக்கமாகும். இன்று டென்னிஸில் அங்கிதா ரெய்னா ஒரு வெண்கலமும், துப்பாக்கி சுடுதலில் பதினைந்து வயது ஷர்துல் விஹான் வெள்ளியும் வென்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
இந்தியா 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலம் வென்றுள்ளது. இதில் துப்பாக்கி சுடுதலில் எட்டு பதக்கங்கள், மல்யுத்தத்தில் மூன்று பதக்கங்கள், கபடியில் ஒரு பதக்கம், செபக்டக்ராவ்-இல் ஒரு பதக்கம், டென்னிஸில் ஒரு பதக்கம், வுஷுவில் நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications