ஆசிய விளையாட்டு : மகளிர் கபடி இறுதியில் இந்தியா தோல்வி… வெள்ளி பதக்கம் வென்றது
ஜகார்த்தா : மகளிர் கபடி இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய மகளிர் அணி, ஈரான் அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. கடந்த இரண்டு முறை ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளது.
இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியும், ஈரான் அணியும் கடுமையாக போராடின. முதல் பாதியில் 13-11 என முன்னிலையில் இருந்த இந்திய அணி, இரண்டாம் பாதியில் பின்தங்கியது. எனினும், இரண்டு அணிகளுக்கு இடையேயான இடைவெளி குறைவாகவே இருந்தது. எந்த அணி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற சூழ்நிலை நிலவியது.

இரண்டாம் பாதி முழுவதும் பின்தங்கி இருந்த இந்திய அணி, கடைசி மூன்று நிமிடங்கள் இருக்கும்போது, 21-25 என நான்கு புள்ளிகள் பின்தங்கி இருந்தது. அங்கிருந்து மீள முடியாமல், இறுதியில் 24-27 என தோல்வி அடைந்தது.
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
நேற்று அரையிறுதியில் ஈரான் அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெண்கலம் வென்ற ஆடவர் கபடி அணி வீரர்கள், மகளிர் அணிக்கு உற்சாகமளித்து வந்தார்கள். அவர்களுக்கு மேலும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் மகளிர் அணியும் ஈரானிடம் வீழ்ந்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 24 பதக்கங்கள் வென்று பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.


Click it and Unblock the Notifications