ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு எட்டாவது பதக்கம் கிடைத்துள்ளது. பதினைந்து வயது வீரர் ஷர்துல் விஹான் டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதல் இறுதிச் சுற்றில் பங்கேற்றார். அதில் முதல் இடத்தை ஒரு புள்ளியில் தவற விட்ட அவர், வெள்ளி வென்றிருக்கிறார்.
டபுள் ட்ராப் இறுதிச் சுற்றில் கொரியாவின் சின் ஹியுன்வூ 74 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், ஷர்துல் விஹான் 73 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். மூன்றாம் இடம் பிடித்த கத்தாரின் அல் மர்ரி 53 புள்ளிகள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு இது பதினேழாவது பதக்கமாகும். இன்று டென்னிஸில் அங்கிதா ரெய்னா ஒரு வெண்கலம் வென்றார். அதையடுத்து, இந்த வெள்ளி கிடைத்துள்ளது.
இந்தியா 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, 9 வெண்கலம் வென்றுள்ளது. இதில் துப்பாக்கி சுடுதலில் எட்டு பதக்கங்கள், மல்யுத்தத்தில் மூன்று பதக்கங்கள், செபக்டக்ராவ்-இல் ஒரு பதக்கம், டென்னிஸில் ஒரு பதக்கம், வுஷுவில் நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளது.