ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்தார், நீரஜ் சோப்ரா. இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவின் எட்டாவது தங்கத்தை வென்று அசத்தி இருக்கிறார்.
ஆசிய விளையாட்டில் இன்று நடந்த ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.06 மீட்டர் தூரம் ஈட்டி வீசி தேசிய சாதனையை முறியடித்தார். மேலும், இரண்டாம் இடம் பிடித்த சீனாவின் லியுவை (82.22 மீட்டர்) விட 5 மீட்டருக்கும் அதிக தூரம் வீசியது ஆசிய விளையாட்டு அரங்கில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மேலும், ஈட்டி எறிதலில் ஆசிய விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத் தந்து பெருமையடைந்துள்ளார் நீரஜ் சோப்ரா. நீரஜ் ஆறு வாய்ப்புகளில் இரண்டு முறை வெற்றிகரமாக ஈட்டியை வீசவில்லை. மற்ற நான்கு வாய்ப்புகளில் இரண்டாம் இடம் பிடித்தவரை விட அதிக தூரம் வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வென்றால் மட்டுமே பதக்கப் பட்டியலில் உயர முடியும் என்ற நிலையில், நீரஜ் சோப்ரா வென்ற இந்தியாவின் எட்டாவது தங்கம் மூலம் இந்தியா சிறிது ஆறுதலடைந்துள்ளது.