ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதி டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பாக அங்கிதா ரெய்னா பங்கேற்றார். அதில் தோல்வி அடைந்த அங்கிதா ரெய்னா வெண்கலம் வென்றார்.
இந்தியாவுக்கு இது பதினாறாவது பதக்கமாகும். இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டென்னிஸில் கிடைக்கும் முதல் பதக்கம் இதுதான். ஆசிய விளையாட்டில் சானியா மிர்சாவுக்கு (வெள்ளி 2006), பின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வெல்லும் இரண்டாவது பெண் அங்கிதா ரெய்னா தான்.
இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் சீனாவின் சாங் ஷுவாய்-ஐ சந்தித்தார். அந்த போட்டியில் முதல் செட்டை 4-6 என இழந்தார். இரண்டாவது செட்டில் கடுமையாக போராடிய அங்கிதா, அந்த செட்டை 6-7 என இழந்து, போட்டியில் தோல்வி அடைந்தார்.
அரையிறுதியில் தோற்றாலும், காலிறுதியில் வெற்றி பெற்றால் வெண்கலம் உறுதி என்பதால் அங்கிதா வெண்கலம் பெற்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
இந்தியா இதுவரை 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 தங்கம், 3 வெள்ளி, 9 வெண்கலம் வென்றுள்ளது. நேற்று வுஷுவில் நான்கு வெண்கலம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.