ஹாங்சோ : 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வில்வித்தையில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
சீன தைபே மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இது இந்தியாவின் 19வது தங்கப் பதக்கம் ஆகும்.

வில்வித்தை மகளிர் அணிப் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜோதி, அதிதி மற்றும் பிரனீத் ஆகியோர் அபாரமாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி சீன தைபே அணியை சேர்ந்த மூன்று வீராங்கனைகளை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்திய வீராங்கனைகள் 230 - 288 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இது வில்வித்தையில் இந்தியாவிற்கு 2வது தங்க பதக்கம் ஆகும். 2023 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 82 பதக்கங்களை அள்ளி இருக்கிறது.
முன்னதாக ஆடவர் கலப்பு இரட்டையர் வில்வித்தை இறுதிப் போட்டியில், இந்தியாவின் ஜோதி சுரேகா, ஓஜாஸ் ஜோடி 159 - 158 என்ற புள்ளிக் கணக்கில் கொரியா அணியை சேர்ந்த சேவோன் சோ - ஜேஹூன் ஜூவை வீழ்த்தி தங்கம் வென்றனர். இது வில்வித்தை பிரிவில் புதிய சாதனை ஆகும். தற்போதைய ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவே இந்தியா வில்வித்தை பிரிவில் வென்ற முதல் தங்கம் ஆகும்.
இந்தியா இதுவரை 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் வென்றுள்ளது. மொத்தம் 82 பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனா 321 பதக்கங்களுடனும், இரண்டாம் இடத்தில் ஜப்பான் 147 பதக்கங்களுடனும், மூன்றாம் இடத்தில் கொரியா 149 பதக்கங்களுடனும் உள்ளன.