ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான துப்பாக்கிச்சுடுதல் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சிஃப்ட் சம்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 45 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 5வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய போட்டிகளில் இன்று காலை முதலே இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தலாக செயல்பட்டு வருகின்றனர்.

இன்று காலை நடைபெற்ற போட்டியில் மகளிருக்கான துப்பாக்கிச்சுடுதலில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு, இஷா சிங் மற்றும் ரிதம் சங்கார் ஆகியோரை கொண்ட இந்திய அணி தங்கம் வென்று அசத்தியது. தற்போது மகளிருக்கான துப்பாகிச்சுடுதலில் 50 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் சிஃப்ட் சம்ரா 469.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அதேபோல் இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை ஆஷி சவுக்சி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். வெள்ளி வெல்ல வாய்ப்பிருந்த நிலையில், கடைசி நேரத்தில் செய்த தவறால் வெண்கலம் வென்றார். நடப்பாண்டு ஆசிய போட்டிகளில் ஆஷி சவுக்சி வெல்லும் 3வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் ரைஃபிள் குழு பிரிவில் வெள்ளியும், 50 மீட்டர் ரைஃபிள் குழு பிரிவில் வெள்ளியும் வென்று அசத்தினார்.

அதேபோல் ஆடவர் துப்பாக்கிச்சுடுதலில் ஸ்கீட் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் படகோட்ட பிரிவில் இந்தியாவின் விஷ்ணு சரவணன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என்று மொத்தமாக 20 பதக்கங்களை வென்றுள்ளது.