ஆசிய விளையாட்டு துவக்க விழா.. நொடிக்கு நொடி வாய்பிளக்க வாய்த்த பிரம்மாண்டம்!
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் கண்ணைப் பறிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
போட்டிகளில் பங்கேற்கும் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அறிமுகம் முடிந்த பின், இந்தோனேசிய நாட்டின் கோடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆசிய ஒலிம்பிக் அமைப்பின் கொடி ஏற்றப்பட்டது.
பின்பு, நடைமுறைப்படி விழா பொறுப்பாளர்கள் மற்றும் இந்தோனேசிய அதிபர் வரவேற்றுப் பேசிய பின், 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமானதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், இந்தோனேசிய அதிபர்.

தொடர்ந்து, இந்தோனேசிய பாடகியான வியா வாலேன் ஆசிய விளையாட்டுப் போட்டியின் அதிகாரப் பூர்வ பாடலை பாட, அரங்கம் உற்சாகத்தில் கரை புரண்டது. அந்த பாடல் மொழி புரியாவிட்டாலும் கேட்பதற்கு இனிமையாக இருந்தது.
தொடர்ந்து இந்தோனேசிய வரலாறு, கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை பறைசாற்றும் நிகழ்ச்சிகள் தொடங்கின.
முதலில், இந்தோனேசியா பிறந்த கதையை அந்த பிரம்மாண்ட மேடையில் ஒரு நடன நாடகமாக நடத்திக் காட்டினர். ஏராளமான கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி பெரிய படைப்பாக இருந்தது.
முதலில், பழங்குடியினர் குழுக்களாக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ள, பின் கப்பலில் வந்த மற்றொரு குழு, அனைத்து பழங்குடியினரையும் ஒன்றிணைக்க உதவுவதாக கூற, இந்தோனேசியா பிறந்ததாக வடிவமைக்கப்பட்டு இருந்தது இந்த நாடகம். இந்தோனேசியாவில் 17000 தீவுகள் வரை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, இசை நிகழ்ச்சிகள், கலை நடனங்கள் ஆகியவை நடைபெற்றன. குறிப்பாக, ஐந்து பூதங்கள் என கூறப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றை மையமாக வைத்து நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு நொடியும், அரங்கம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வான வேடிக்கைகளாலும் நிரம்பி வழிந்தது. அதே போல, ஒவ்வொரு நடன நிகழ்ச்சியிலும் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, August 18, 2018, 20:11 [IST]
Other articles published on Aug 18, 2018


Click it and Unblock the Notifications