இன்சியான்: இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. ஆடவர் ஸ்குவாஷ் போட்டியில், இந்தியாவின் செளரவ் கோஷல், ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் இக்பால் நசீரை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார்.
இதன் மூலம் ஒரு பதக்கம் இந்தியாவுக்குக் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இதில் வென்றாலும், தோற்றாலும் கோஷலுக்கு பதக்கம் கண்டிப்பாக கிடைக்கும்.
இக்பால் நசீருக்கு எதிரான இன்றைய போட்டியின்போது 11-9, 9-11, 11-2, 11-9 என்ற செட் கணக்கில் கோஷல் வெற்றி பெற்றார்.
ஜோஷ்னாவை வீழ்த்தி தீபிகா வெற்றி
அதேபோல மகளிர் ஒற்றையர் பிரிவிலும் இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் இன்று உறுதியானது. இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல் ஆகியோர் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் மோதினர்.
இதில் தீபிகா, 7-11, 11-9, 11-8, 15-17, 11-9 என்ற செட் கணக்கில் ஜோஷ்னாவை வீழ்த்தி அரை இறுதிக்குத் தகுதி பெற்றார். இதன் மூலம் தீபிகாவுக்கும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.