18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்... இன்று துவக்க விழா.. களைகட்டும் ஜகார்த்தா!
ஜகார்த்தா: 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இன்று மாலை துவங்குகிறது. துவக்க விழாவில் 4,000க்கும் மேற்பட்ட கலைஞர்களின் வண்ணமயமான கலை, இசை, நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1951ல் துவங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளுக்குப் பிறகு மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
தற்போது 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பங்க்கில் நடக்க உள்ளது. செப்டம்பர் 2ம் தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.
முதல் நாளான இன்று மிக பிரம்மாண்ட துவக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துவக்க விழா நிகழ்ச்சிகளை சோனி டிவி நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்த நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவக்க விழா நிகழ்ச்சிக்கான ஒளிபரப்பு துவங்குகிறது.

அணிவகுப்பு
மாலை 6.15க்கு, வீரர்களின் அணிவகுப்பு நடைபெறுகிறது. 45 நாடுகள் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்கின்றன. இந்தியாவின் சார்பில், ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தேசியக் கொடியை ஏந்தி, இந்த அணிவகுப்பில் பங்கேற்கிறார்.

பிரபல பாடகர்கள்
அதைத் தொடர்ந்து வண்ணமயமான, கலை, நாட்டிய, இசை நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. இரவு 8.30 மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. துவக்க விழாவில் இந்தோனேசியாவின் பிரபல பாடகர்கள் ஆங்குன், ரைசா, துலுஸ், எடோ கோன்டோலோகிட், புத்ரி அயு, பாடின், ஜி.ஏ.சி., காமாசியான், விலா வாலென் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

பிரம்மாண்ட மேடை
துவக்க விழா நடைபெறும் ஜி.பி.கே. மைதானத்தில் 120 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், 26 மீட்டர் உயரமுள்ள மிகப் பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய மலையில், அருவிகள் கொட்டும் வகையில் இந்த மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

4000 பேர் நடனம்
பிரபல நடன இயக்குநர்கள் டேனி மாலிக் மற்றும் ஈகோ சுப்ரியான்டோ ஆகியோரின் கண்காணிப்பில், 4000 பேர் கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications