ஹைதராபாத்: பேட்மிண்டன் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சீன பயிற்சி முறையை பின்பற்றும் கோபிசந்த், பயிற்சி வகுப்புகளில் தரப்படும் உணவில் இறைச்சி இருக்க வேண்டும் கட்டாயம் ஆக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசிலின் ரியோ நகரில் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் விளையாடிய பி.வி.சிந்துவை போல அவரது பயிற்சியாளர் புல்லெலா கோபிசந்த் அதிகம் கவனிக்கப்பட்டார். சிந்து எடுக்கும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும், தவறவிடும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் ஏற்ப முகபாவனைகளை காட்டிக்கொண்டிருந்தால். தனது பார்வையால், சைகையால் சிந்துவிற்கு கடைசி நிமிடம் வரை பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார்.

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் பெற்று இந்தியா வந்து சேர்ந்த இருவருக்கும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சூட்டோடு சூட்டாக விழாவும் நடத்தப்பட்டது.
கூகுளில் கோபிசந்த் பற்றி அதிகமாக கூகிளில் தேடப்பட்டிருப்பது அவரது பேட்மிண்டன் அகாடமி பற்றியும், அதன் கட்டண விவரங்களையும் பற்றிய தகவல்கள்தான்.
ஒலிம்பிக்கில் சிந்துவின் திறமை வெளிப்பட்ட விதமும், அதற்கு கோபிசந்த் கொடுத்த பயிற்சியும் அதிகம் பேசப்பட்டதால், பல பெற்றோர் கோபிசந்த்தின் அகாடமியில் தங்களது குழந்தைகளை சேர்த்து இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் விளையாட வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் விசாரித்தனர். அப்போதுதான் தெரியவந்தது கோபிசந்த்தின் அகாடமியில் 'மாமிச உணவு கட்டாயம்' என்ற தகவல்.
சீன வழியில் தனது மாணவர்களுக்கான பயிற்சியை மேற்கொள்ளும் கோபிசந்த், என்ன ஆனாலும் பரவாயில்லை என்று தனது அகாடமியின் சட்டங்களை அமைத்தார். ஆனால், அவரிடம் வந்து சேர்ந்த அனைவரும் சைவ பிரியர்களாக இருந்தனர்.
கோபிசந்த், முதலில் அவர்களிடம் மாமிச உணவு உட்கொள்ள வேண்டிய காரணங்களை விளக்கினார். அவர்கள் ஒப்புக்கொண்டதும் அவர்களது பெற்றோர், அடுத்து அவர்களது உறவினர்கள் என தன்னால் இயன்ற அளவு தனது விளக்கங்களைக் கொடுத்து தனது மாணவர்களை உருவாக்கினார்.
கோபிசந்த் கூறிய உணவுமுறைகளைப் பின்பற்றிய மாணவர்களின் வேகமும், எனர்ஜியும் வேறு லெவலுக்குச் சென்றன. சாய்னா மாமிச உணவை பயிற்சித்துப் பார்த்தார். அவர் உணர்ந்த மாற்றம், அவரது வெற்றியில் தெரிந்தது. அதேபோல சாய்னா வழியில் பலர் சென்றனர்.
பி.வி.சிந்துவின் தாய், தந்தை ஏற்கனவே விளையாட்டு வீரர்களாக இருந்ததால் சிந்துவின் உணவு பழக்கவழக்கங்களை சிறு வயதிலிருந்தே முறையாக சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்கின்றனர்.
புகழ்பெற்ற இந்திய மல்யுத்த வீரரான சுஷில் குமார், 2008இல் வெள்ளிப்பதக்கமும், 2012இல் வெண்கலப்பதக்கமும் ஒலிம்பிக்கில் வென்று கொடுத்தவர். அவர் முழு சைவம். ஆம், சுஷில் குமார் காய்கறி உணவுகளை மட்டுமே உட்கொள்கிறார். பால், அவரது எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. காய்கறிகள், உடலுக்குத் தேவையான சக்திகளைக் கொடுக்கின்றன. எனவே, களத்தில் புகுந்த சில நிமிடங்களில் எதிராளியை கவிழ்த்து வெற்றியுடன் நிமிர்ந்து விடுகிறார் சுஷில் குமார்.
எப்போதும் தனியாக பயிற்சியை மேற்கொள்ளும் சுஷில் குமார் (பல முறை அவரது பயிற்சியாளர் இதை ஒரு புகாராகவே விளையாட்டுத் துறையில் பதிவு செய்திருக்கிறார்), ஒருமுறை அப்படி பயிற்சியை மேற்கொண்டபோது தோளில் காயம் ஏற்படுத்திக் கொண்டார். யாருமே எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இரண்டாண்டுகள் சுஷில் குமாரை இந்த காயம் கிடப்பில் போட்டது. '
இந்த ஓய்வைப் பயன்படுத்தி இரண்டாண்டுகளில் தனது எடையை 66லிருந்து 74க்கு உயர்த்தி 2014 காமன்வெல்த் போட்டியில் அவர் கோல்டு மெடல் வென்றார் என்பது வேறு விஷயம்.
மாமிச உணவுகளை உண்ணாமல் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் வீரர்கள், காயங்களிலிருந்து விரைவில் குணமடைய முடியாது. அந்த ஓய்வு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். திடீரென ஏற்படும் சிறு காயங்கள், விளையாட்டு வீரர்களின் அதிக நாட்களை எடுத்துக்கொண்டால் அவர்களது குறிக்கோளை அடைவது மேலும் விரைவாக்கப்படும். இதனால் ஏற்படும் மன அழுத்தம் வீரர்களின் மனநிலையை பாதிக்கும் என்பதால் மாமிச உணவை கோபிசந்த் கட்டாயமாக்கியிருந்தார்.
சுஷில் குமாரைத் தவிர, உலக அரங்குகளில் இந்தியாவைப் பெருமைப்படுத்திய பாக்ஸர்கள் ஷிவா தப்பா, விஜேந்தர் சிங், மேரி கோம் மற்றும் தட்டு எரிதலில் இந்தியாவை முன்னிறுத்திய கிருஷ்ணா பூனியா ஆகியோர் மாமிச உணவுகள் பலம் சேர்ப்பதுடன் எதிர்ப்பு சக்தியும் சக்தியையும் கொடுக்கின்றன என்று கூறியிருப்பதுடன் அவற்றை பரிந்துரைக்கிறார்கள்.
கோபிநாத் பயிற்சி பாசறையில் மாணவர்கள் குறைந்தபட்சம் சிக்கனையாவது கட்டாயமாக உண்ண வைக்கப்பட்டனர். ஆரம்பித்தில் மறுப்பவர்கள்கூட அசைவம் உண்ண ஆரம்பித்த பிறகு, அதை விரும்புகிறார் என்கிறார் அகாடமியின் பயிற்சியாளர் ஒருவர்.
புரதச்சத்துள்ள சிக்கன், உடல் எடை இழைப்பை ஈடுகட்டி மினரல்களையும் விட்டமின்களையும் தரக்கூடியது. ரெட் மீட் எனப்படும் மாட்டிறைச்சி இரும்புச் சத்து நிறைந்தது, உடலில் உள்ள சத்துக்களை தக்கவைப்பதோடு, விளையாட்டின் போது ஏற்படும் தசை பிரச்சினைகளை இறைச்சியில் உள்ள அமினோ ஆசிட் சரிசெய்யக்கூடியது என்கிறார் அந்த பயிற்சியாளர்.
சீன பயிற்சி முறையை பின்பற்றும் கோபிசந்த், பயிற்சி வகுப்புகளில் தரப்படும் உணவில் இறைச்சி இருக்க வேண்டும் கட்டாயம் ஆக்கியுள்ளார். அவரே வந்து என்னமாதிரியான உணவுகள் தரப்படுகின்றன என சோதிப்பார் என்று சொல்லும் பயிற்சியாளர், சாய்னா-சிந்துவின் வெற்றி பலரின் உணவுப்பழக்கம் குறித்த நம்பிக்கையை உடைக்கும் எனவும் கோபிச்சந்த் நம்புகிறார்.