சாந்திக்கு ஆதரவாக போராட குதிக்கும் கனடா அரவாணி வீராங்கனை!

தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் சாந்தி. ஆனால் அவருக்கு பின்னர் பாலின சோதனை நடத்தி அதில் அவர் ஆண் தன்மை மிக்கவர் என்று அறிவிக்கப்பட்டு, பதக்கம் பறிக்கப்பட்டது. அவர் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் மனம் ஒடிந்து போன சாந்திக்கு தமிழக முதல்வர் கருணாநிதி ஆறுதல் கூறி, சாந்தி பிறந்த மாவட்டமான புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், இடைக்கால பயிற்சியாளர் வேலையை வழங்கினார். ஆனால் சம்பள உயர்வு தராமல் தான் அலட்சியப்படுத்தப்படுவதாக கூறி சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார் சாந்தி.
இந்த நிலையில் சாந்தி மீதான தடையை அகற்ற களத்தில் குதித்துள்ளார் கனடா வீராங்கனை கிறிஸ்டன் ஒர்லி. இவரது கதையும் சோகமானதுதான். கிறிஸ் என்ற பெயரில் ஆணாக இருந்தவர் கிறிஸ்டன் ஒர்லி. ஆனால் வளரவளர பெண் தன்மை அவருக்குள் குடியேறியது. தான் வித்தியாசமானவராக இருப்பதை உணர்ந்த கிறிஸ், மருத்துவர்களை அணுகியபோது, உனக்குள் பெண் தன்மை அதிகரித்து வருவதாக தெரிவித்தனர். அறுவைச் சிகிச்சை மூலம் முழுமையாக பெண்ணாக மாறுமாறும் அறிவுறுத்தினர்.
இதனால் மனம் உடைந்த கிறிஸ் 3 முறை தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும் பின்னர் மன நல ஆலோசனைகளைப் பெற்று முழுமையான பெண்ணாக மாறினார். இன்று கனடாவின் வெற்றிகரமான சைக்கிள் வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.
முழுமையான பெண்ணாக மாறியது முதல் தன்னைப் போல பிரச்சினையை சந்திப்போருக்கு உதவி செய்வதை ஒரு பணியாகவே செய்து வருகிறார் கிறிஸ்டன்.
தென் ஆப்பிரிக்க சைக்கிள் வீராங்கனை காஸ்டர் செமன்யாவுக்கு, கடந்த ஆண்டு பெர்லினில் நடந்த உலக சாம்பியன்போட்டியின்போது சாந்திக்கு ஏற்பட்டதைப் போன்ற பிரச்சினை உருவானது. செமன்யா ஆண் தன்மை மிக்கவர் எனறு கூறி 11 மாத கால தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்காக கடுமையாக வாதாடினார் கிறிஸ்டன். இதன் விளைவாக சமீபத்தில் செமன்யா மீதான தடையை உலக சைக்கிள் சங்கம் நீக்கியது.
இந்த நிலையில், தற்போதுசாந்திக்காக குரல் கொடுக்க முன்வந்துள்ளார் கிறிஸ்டன். இதுதொடர்பாக சாந்திக்கு இமெயில்களை அனுப்பி தொடர்பு கொண்டுள்ளார். இதுகுறித்து கிறிஸ்டன் கூறுகையில், காஸ்டர் செமன்யா விவகாரத்தில் நான் வெற்றி பெற்றேன். அதேபோல சாந்திக்கும் நான் உதவப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
செமன்யாவுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்காவும் அவருக்காக அணி திரண்டது. போராட்டங்கள் வெடித்தன. சட்ட ரீதியான அணுகுமுறைகளும் உலக சைக்கிளிங் கழகத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
ஆனால் சாந்தி விவகாரத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. சாந்தி பாலின சோதனையில் தோல்வியடைந்து விட்டார் என்ற ஒற்றை வரியோடு இந்திய தடகளச் சங்கம் நின்று விட்டது. மத்திய அரசும் இதுகுறித்து கவலைப்படவில்லை. விளையாட்டு அமைப்புகளும் கண்டுகொள்ளவில்லை. யாருமே இதைப் பெரிய விஷயமாகவே நினைக்கவில்லை.
எதற்கெடுத்தாலும் விடிய விடிய ஒரே செய்தியை ஒளிபரப்பி பொழுதைப் போக்கும் ஆங்கில டிவி சானல்களும் சாந்தி குறித்து அலட்டிக் கொள்ளவே இல்லை.
இந்த நிலையில் பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் ஒருவர் தனக்காக போராட களத்தில் இறங்கியுள்ளது சாந்திக்கு பெரும் மன ஆறுதலைக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து சாந்தி கூறுகையில், எனக்கு கிறிஸ்டன் ஒர்லி மெயில்கள் அனுப்பியுள்ளது உண்மைதான். என்னை மீண்டும் ஓட வைக்க அவர் விரும்புகிறார். எனக்கு அவர் உதவி வருகிறார் என்றார். அத்தோடு நில்லாத சாந்தி, எனக்காக அனைவரும் உதவுமாறு தயை கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன் என்றார் கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீருடன்.
இப்போதாவது சாந்திக்காக இந்திய இதயங்கள் துடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications