கமல் படத்தில் நடித்த பிரபல விளையாட்டு வீரர் காலமானார்.. 2 முறை ஒலிம்பிக்கில் விளையாடியவர்
டெல்லி: பிரபல வட்டு எறிதல் வீரர் பிரவீன் குமார் சோப்தி தனது 74 வயதில் காலமானார். பிரவீன் குமார் இந்தியாவுக்காக 1968 மற்றும் 72ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் விளையாடியவர்.
இதை தவிர ஆசிய போட்டியில் இந்தியாவுக்காக 4 பதக்கங்களை பிரவீன்குமார் வென்றுள்ளார். உயரமான தோற்றம், பயில்வான் போன்ற உடல் ஆகியவற்றை கொண்டு இருந்த பிரவீன் குமாருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன.
இருப்பினும் தூர்தஷனில் வெளியான மகாபாரதம் தொடரில் பீம் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர்.

பீம் பாய்
தமிழில் நடிகர் கமல்ஹாசன் நான்கு வேடத்தில் நடித்து மெகா ஹிட்டான மைக்கில் மதன் காமராஜன் திரைப்படத்தில் பிரவின் குமார் நடித்துள்ளார். பணக்கார கமலாக வரும் மதனின் பாதுகவாலராக பீம் என்று கதாபாத்திரத்தில் நடித்து, அப்போதைய தமிழக ரசிகர்களை கவர்ந்தவர் பிரவீன் குமார்.

விளையாட்டு வீரர்
பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிரவீன் குமார் ஆரம்ப காலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து நாட்டுக்காக சேவை ஆற்றியுள்ளார். அப்போது கிடைத்த வாய்ப்பின் மூலம் வட்டு எறிதலில் பிரபலமாகி இந்தியா சார்பாக பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, பின்னர் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் ஜொலித்தார்.

அரசியல்
ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய பிரவீன் குமார்,2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதனையடுத்து அக்கட்சியிலிருந்து விலகி 2014ஆம் ஆண்டு பா.ஜ.க. வில் பிரவீன்குமார் இணைந்தார்.

மறைவு
டெல்லியில் தங்கியிருந்த பிரவீன் குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். தற்போது அவரது உடல் சொந்த மாநிலமான பஞ்சாப்க்கு எடுத்து செல்லப்பட்டது. ராணுவ விரர், விளையாட்டு வீரர், நடிகர், மற்றும் அரசியல்வாதி என பல அவதாரம் எடுத்த பிரவீண்குமார் என்றும் தமிழக ரசிகர்களிடையே பீம் பாயாக வாழ்வார்.


Click it and Unblock the Notifications