தற்காலிகப் பயிற்சியாளர் பதவியை உதறினார் தடகள வீராங்கனை சாந்தி

புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. தேசிய அளவில் தடகள போட்டிகளில் சாம்பியன் ஆனவர். மாநில அளவிலான போட்டிகளிலும், தேசிய போட்டிகளிலும், சர்வதேச போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை தேடித் தந்தவர்.
2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் சாந்தி. இதையடுத்து முதல்வர் கருணாநிதி சாந்திக்கு பாராட்டுக்களுடன் ரொக்கபரிசு வழங்கி மகிழ்வித்தார்.
இந்த நேரத்தில் திடீர் அதிர்ச்சியாக, சாந்திக்கு ஆண் தன்மை கூடுதலாக இருப்பதாக கூறி அவரது பதக்கத்தைப் பறிப்பதாக அறிவித்தது ஆசிய விளையாட்டு வாரியம்.
இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார் சாந்தி. இருப்பினும் சாந்திக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். எந்த உதவி கேட்டும் தன்னை அணுகலாம் என முதல்வர் கருணாநிதி ஆறுதல் அளித்து புதுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், சாந்திக்கு, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு பயிற்சியாளராக தற்காலிக பணி நியமன ஆணையையும் வழங்கினார். அவருக்கு ரூ. 5000 சம்பளத்தில் இந்த வேலை வழங்கப்பட்டது.
கடந்த 3 வருடங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 80 மாணவ மாணவியருக்கு பயிற்சி அளித்து அவர்கள் பல போட்டிகளில் சாம்பியன்களும் ஆகியுள்ளனர். ஆனால் 5000 ரூபாய் சம்பளம் என்பது இதுவரை உயர்த்தப்படவே இல்லையாம். மேலும், பணி நிரந்தரமும் செய்யப்படவில்லை.
இதையடுத்து விளையாட்டு ஆணையக அதிகாரிகளுக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் பலமுறை நேரிலும், தபால் மூலமும் கோரிக்கை மனுக்களை அனுப்பினார் சாந்தி. பலன் இல்லை. முதல்வரையே நேரில் சந்திக்கவும் முயன்றார். ஆனால் முடியவில்லை. அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாம்.
இதையடுத்து ஜூலை 31ம் தேதியுடன் தனது பணியை முடித்துக் கொள்வதாக விளையாட்டு ஆணையகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார் சாந்தி.
சாந்திக்கு முதல்வர் கருணை காட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications