இந்திய தடகள வீரர்களுக்குக் கடும் நெருக்கடி.. ஊக்கமருந்து விவகாரத்தில் இந்தியாவுக்கு ‘ரெட் கார்டு’
டெல்லி: சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஊக்கமருந்து சோதனையில் முறைகேடுகள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 'ஏ' பிரிவு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது மிக ஆபத்தான பிரிவு ஆகும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய தடகள வீரர்களிடையே ஊக்கமருந்து பயன்பாடு அதிகரித்துள்ளதே இந்த அதிரடி நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும். இதன் பின்னணி என்ன?
சர்வதேச தடகள ஒருமைப்பாட்டு அமைப்பு (AIU) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்திய தடகள சம்மேளனம் (AFI) இப்போது உலகிலேயே மிக உயர்ந்த ஆபத்தான பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக கடந்த மூன்று ஆண்டுகளின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டில் 48 வழக்குகள், 2023 இல் 63 வழக்குகள் என இருந்த ஊக்கமருந்து விதிமீறல்கள், 2024 இல் 71 ஆக உயர்ந்து உலகிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால் இந்தியாவை 'பி' பிரிவில் இருந்து 'ஏ' பிரிவுக்கு அந்த அமைப்பு மாற்றி உள்ளது.

கட்டுப்பாடுகள் என்ன?
இந்த 'ஏ' பிரிவு அந்தஸ்தால் இனி இந்திய வீரர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்காத நேரத்திலும், அதாவது பயிற்சிக் காலங்களில் கூட வீரர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் திடீர் சோதனைகள் நடத்தப்படும். அதேபோல், உலகத்தரம் வாய்ந்த போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்றால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊக்கமருந்து சோதனைகளை வீரர்கள் கட்டாயம் முடித்திருக்க வேண்டும். ஒருவேளை இந்த விதிகளில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால், இந்திய வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும்.
ஒலிம்பிக் கனவுக்கு ஆபத்தா?
இந்த 'அதிக ஆபத்து' முத்திரை இந்தியாவின் விளையாட்டுத் துறை நற்பெயருக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வரும் வேளையில், ஊக்கமருந்து விவகாரத்தில் இந்தியாவின் இந்த நிலை சர்வதேச நாடுகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தும்.
காரணம் என்ன?
தடகள வீரர்களுக்கு ஊக்கமருந்து குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் மருந்துகள் எளிதாகக் கிடைப்பது போன்ற கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், உள்ளூர் அளவில் செயல்படும் ஊக்கமருந்து தடுப்பு முறைகள் வலுவாக இல்லை என்பதையும் இந்த நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இனியாவது இந்திய தடகளத் துறை விழித்துக்கொண்டு இந்த அவப்பெயரைத் துடைக்குமா அல்லது இந்தியாவின் விளையாட்டு நேர்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகவே நீடிக்குமா?


Click it and Unblock the Notifications