அடிலைட்: உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு முந்தைய வார்ம் அப் போட்டிகள் தொடங்கி விட்டன. இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியாவை, ஆஸ்திரேலியா பிரித்து மேய்ந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
அடிலைடில் நடந்த வார்ம் அப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தியப் பந்து வீச்சை வழக்கம் போல பொறித்து எடுத்து விட்டனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.
முதல் பந்து முதல் கடைசிப் பந்து வரை ரன் மழை பொழிந்தோடியது. டேவிட் வார்னர் ஒரு சதம் போட்டார். கிளன் மேக்ஸ்வெல் மறுபக்கம் அதிரடியாக ரன்களைக் குவித்து இந்தியாவை நையப்புடைத்தார். வார்னரும், ஆரோன் பின்ச்சும் சேர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். வார்னர் 83 ரன்களில் 104 ரன்களைக் குவித்தார். பின்ச் 20 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார்.

வாட்சன் 17 பந்துகளில் 22 ரன்களை விளாச, ஜார்ஜ் பெய்லி 44 ரன்களைச் சேர்த்தார். ஆனால் உண்மையான அதிரடியைக் காட்டியவர் மேக்ஸ்வெல்தான். 57 பந்துகளைச் சந்தித்த அவர் 122 ரன்களை வெளுத்து விட்டார். இறுதியில், 48.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா 371 ரன்களைக் குவித்து ஓய்ந்தது.
இந்தியப் பந்து வீச்சாளர்களின் செயல் திறமின்மை மீண்டும் ஒருமுறை இன்று நிரூபணமானது. 8 பந்து வீச்சாளர்களைக் கேப்டன் டோணி இன்று பயன்படுத்தினார். இவர்களில் ரனகளைக் குறைவாக கொடுத்தவர் அஸ்வின் மட்டுமே. ஆனால் அவருக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.
முகம்மது சமி 83 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார். உமேஷ் யாதவ் 52 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்களையும், மொஹித் சர்மா 62 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்களையும் எடுத்தனர். ஸ்டூவர்ட் பின்னிக்கும், அக்ஷர் படேலுக்கும் தலா 1 விக்கெட் கிடைத்தது. புவனேஸ்குமார் 5 ஓவர்களை வீசியும் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. ரவீந்திர ஜடேஜாவும் அப்படியே 2 ஓவர் வீசி 19 ரன்களை அள்ளிக் கொடுத்தார்.
தொடர்ந்து இந்தியா பெரிய இலக்கை துரத்தத் தொடங்கியது.
முத்தரப்புத் தொடரில் சரிவர ஆடாமல் இருந்த ஷிகர் தவான் இன்றைய போட்டியில் சற்று சுதாரித்து ஆடினார். அரை சதம் போட்டார். 59 ரன்கள் எடுத்தார். ஆனால் ரோஹித் சர்மா ஏமாற்றமளித்தார். 8 ரன்னில் நடையைக் கட்டினார்.
மறுபக்கம் விராத் கோஹ்லி மீண்டும் குழப்ப ஆட்டத்தைத் தொடர்ந்தார். 18 ரன்களே அவரிடமிருந்து வந்தது. அஜிங்கியா ரஹானே சற்று ஆறுதல் தரும் வகையில் ஆடினார். 66 ரன்களைச் சேர்த்தார் ரஹானே. இவரது ஆட்டம் அதிரடியாகவும் அமைந்தது இந்தியாவுக்கு முக்கியமான ஒன்றாகும்.
சுரேஷ் ரெய்னா சொதப்பலும் தொடர்ந்தது. 9 ரன்களே கொடுத்தார். அம்பட்டி ராயுடு அதிரடியாக ஆடி 53 ரன்களைச் சேர்த்தார்.
கேப்டன் டோணி டக் அவுட். ஸ்டூவர்ட் பின்னி 5 ரன்களில் கிளம்பி விட்டனர். ரவீந்திர ஜடேஜா விளையாட முயற்சித்தார். 20 ரன்கள் வந்தன.
கடைசி வரை போராடிப் பார்த்த இந்தியா இறுதியில் 45.1 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது மோசமான தோல்விதான். ஆனால் பேட்டிங்கில் நம்மவர்கள் இன்னும் சற்று சிறப்பான பயிற்சிக்கு முயற்சித்திருக்கலாம்.
பந்து வீச்சை சரி செய்ய வேண்டும், பேட்டிங்கில் நல்ல பார்ட்னர்ஷிப்களை கொண்டு வர முயற்சிக்க வேண்டும். பீல்டிங்கில் சுதாரிப்பாக இருக்க வேண்டும். இதை சரி செய்தால் உலகக் கோப்பையைத் தக்க வைப்பது குறித்து நாம் யோசிக்கலாம்.