சிட்னி: தலையில் பந்து பட்டு உயிரிழந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான மேக்ஸ்வில்லே நகரில் இன்று நடந்தது. அந்த நாட்டின் பிரதமர் டோனி அப்பாட் உள்ளிட்ட பலர் இறுதி சடங்கில் பங்கேற்று பிலிப் ஹியூக்ஸ்சுக்கு கண்ணீருடன் விடை அளித்தனர்.
சிட்னியில் கடந்த மாதம் 25ம்தேதி நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அபாட் என்ற பவுலர் வீசிய பவுன்சர் பந்தால் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்கள் சிதறி, கோமா நிலைக்கு போனார் பிலிப் ஹியூக்ஸ். மருத்துவர்களின் பெரும் போராட்டத்திற்கு பலன் கிடைக்காமல் 27ம்தேதி ஹியூக்ஸ் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் உலகெங்குமுள்ள கிரிக்கெட் ரசிகர்களையும், கிரிக்கெட் வீரர்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் பிலிப் ஹியூக்ஸ்சின்
இறுதி சடங்கு, அவரது சொந்த ஊரான மேக்ஸ்வில்லே நகரில் இன்று நடந்தது. ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட், பிரபல கிரிக்கெட் வீரர்கள் பிரையன் லாரா, மெக்ராத், வார்னே, கில்கிறிஸ்ட் ஆகியோர் இறுதி சடங்கில் பங்கேற்றனர்.
மேலும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களும் மேக்ஸ்வில்லே நகரில் குவிந்தனர்.
இந்தியா தரப்பில் விராட் கோஹ்லி, ரோகித் ஷர்மா, மாஜி வீரரும் இந்திய கிரிக்கெட் அணி இயக்குநருமான ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஹியூக்ஸ்சுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக சடலத்துடன் கூடிய சவப்பெட்டியை ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் முதுகில் சுமந்து கண்ணீருடன் சென்றார்.