புவனேஸ்வர்: நடப்பு சாம்பியன், உலகச் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியுடனான ஹாக்கி உலக லீக் பைனல்ஸ் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற கிடைத்த நிறைய வாய்ப்புகளை இந்திய அணி தவறவிட்டது. அதைவிட தோல்வியில் இருந்து ஆஸ்திரேலியா தப்பியது.
ஹாக்கி உலக லீக் பைனல்ஸ் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்கிறது. இதில் இந்தியா உள்பட 8 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று விளையாடியது.
போட்டியின் துவக்கத்திலேயே இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடியது. 200வது சர்வதேசப் போட்டியில் விளையாடும் கேப்டன் மன்பிரீத், ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பாஸ் செய்த பந்தை, மன்தீப் சிங் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால், 21வது நிமிடத்திலேயே ஆஸ்திரேலியா அதை சமன் செய்தது.
போட்டி சமநிலையை எட்டியப் பிறகு, கோலடிக்க இந்திய அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதே நேரத்தில், இந்திய அணியின் நடுகள ஆட்டமும், தடுப்பாட்டமும் சிறப்பாக இருந்தது. அதனால், தோல்வியை தவிர்க்கும் முயற்சியில் ஆஸ்திரேலியா ஈடுபட்டது.
இரு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் 22ல் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா 80 போட்டிகளில் வென்றுள்ளது.
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்றது. இன்று இரவு நடக்கும் ஆட்டங்களில் இந்தியா, இங்கிலாந்தையும், ஆஸ்திரேலியா - ஜெர்மனியையும் சந்திக்கின்றன.