பல்கேரியா:பல்கேரியாவின் ரூஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச அளவிலான மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று அசத்தல் சாதனை படைத்துள்ளார்.
பல்கேரியாவின் ரூஸ் நகரில் டேன் கோலோவ், நிகோலோ பெட்ரோவ் சர்வதேச மல்யுத்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஆடவர்களுக்கான 65 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவு இறுதி சுற்று நடைபெற்றது.

அதில், இந்திய வீரர் பஜ்ரங் புனியா, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோர்டன் ஆலிவருடன் மோதினார். தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக பஜ்ரங் விளையாடினார்.
முடிவில் 12க்கு 3 என்ற கணக்கில் ஜோர்டன் ஆலிவரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். அதன்மூலம்,மல்யுத்த பிரிவில் பஜ்ரங் புனியா தனது 10வது பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக, அவர் காமன்வெல்த் போட்டிகள், ஆசிய போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை வென்றார். வெற்றிபெற்ற தங்கப்பதக்கத்தை அவர் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு சமர்பிப்பதாக கூறியுள்ளார். அவரின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.