
செம்டம்பரில் துவக்க பிசிசிஐ திட்டம்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. டி20 உலக கோப்பை தள்ளிவைப்பு குறித்து ஐசிசியின் அறிவிப்பிற்காக பிசிசிஐ காத்திருக்கும் சூழலில் அதுகுறித்து ஐசிசி தாமதப்படுத்தி வருகிறது. ஆயினும் செப்டம்பர் மாத இறுதியில் ஐபிஎல்லை துவக்க திட்டமிட்டு பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஐபிஎல்லை நடத்த திட்டம்
ஐசிசியின் பிரதிநிதிகள் குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் டி20 உலக கோப்பை குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி வரையில் ஐபிஎல் 2020 தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்டார் இந்தியா அதிருப்தி
ஐசிசியின் அறிவிப்பை அடுத்து இதுகுறித்து திட்டவட்டமான முடிவை பிசிசிஐ வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 44 நாட்கள் அட்டவணை குறித்து ஐபிஎல் ஒளிபரப்பாளரான ஸ்டார் இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. தீபாவளி வரும் நவம்பர் 14ம் தேதி வரும் நிலையில், அதையொட்டி, ஐபிஎல் நடத்தப்பட்டால் தங்களுக்கு விளம்பரங்கள் அதிகமாக வரும் என்று கூறியுள்ளது.

பார்வையாளர்கள் குறைய வாய்ப்பு
இந்த 44 நாட்களில் 60 போட்டிகள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படும் நிலையில் அதிகமான மதிய நேர போட்டிகள் நடத்தப்படும் என்பதால் தங்களது பார்வையாளர்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஸ்டார் இந்தியா தெரிவித்துள்ளது. 5 வருட ஸ்டார் இந்தியா ஒப்பந்தத்தின்படி பிசிசிஐக்கு 16,347 கோடி ரூபாய் கிடைக்கிறது. ஆண்டிற்கு 3,500 முதல் 4,000 கோடி வரை ஸ்டார் இந்தியா பிசிசிஐக்கு கொடுக்கிறது.

குவாரன்டைனை கருத்தில் கொள்ளும் பிசிசிஐ
ஆனால் டிசம்பர் 3ம் தேதி ஆஸ்திரேலியாவில் இந்தியா திட்டமிட்டுள்ள தொடரின் முதல் போட்டி துவங்கவுள்ள நிலையில் நவம்பர் 8ம் தேதியே ஐபிஎல் போட்டிகளை முடித்தால் தான் 10ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ள முடியும். அங்கு குவாரன்டைன், பயிற்சி ஆட்டங்கள் ஆகியவற்றை முடித்துவிட்டு, போட்டிகளில் பங்கேற்க முடியும். இதை கருத்தில் கொண்டே, இந்த தேதிகளில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











