கனவு நிஜமானது.. முதல் இந்தியர்.. வண்ணாரப்பேட்டை 'வாள் வீச்சு' பவானி ஒலிம்பிக்கிற்கு தகுதி
சென்னை: இந்தியாவின் நம்பர்-1 வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை புரிந்துள்ளார்.
வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி, சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று முத்திரை பதித்து வரும் பவானி, 2019ல் பெல்ஜியம், ஐஸ்லாந்தில் நடந்த சாட்டிலைட் உலக கோப்பை வாள்வீச்சு போட்டியில், வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
இந்நிலையில், இந்தாண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதற்காக அவர் இத்தாலியைச் சேர்ந்த நிக்கோலா ஜனோடியிடம் பயிற்சி பெற்று வந்தார்.

தற்போது ஹங்கேரியில் நடந்து வரும் வாள் வீச்சு உலகக் கோப்பை நடந்து வருகிறது. இதில், தொடரை நடத்தும் ஹங்கேரி அணி காலிறுதியில் தோல்வி அடைய, கொரியா அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால், Adjusted Official Ranking (AOR) வழிமுறை மூலமாக பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றார்.
27 வயதான பவானி தேவி, உலக தரவரிசையில் 45-வது இடத்தில் இருக்கிறார். அடுத்த மாதம் வெளியாகும் அதிகாரப்பூர்வ தரவரிசை மூலம், பவானி தேவி ஒலிம்பிக்கில் தேர்வானது முறையாக அறிவிக்கப்படும். இதன் மூலம், ஒலிம்பிக் போட்டியில், வாள் வீச்சு பிரிவில் பங்கேற்கும் முதல் இந்தியர் எனும் பெருமையை நம்ம பவானி தேவி பெறுகிறார்.
பவானியின் பெற்றோர் அமெரிக்காவில் தங்கள் மகள் முறையாக பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக, தங்கள் நகைகளை விற்று, இடங்களை விற்று அனுப்பிவைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications