டெல்லி : மத்திய பட்ஜெட் 2019-20 இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் விளையாட்டுக்கு கடந்த நிதி ஆண்டை விட ரூ.214.20 கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பியுஷ் கோயல் வெளியிட்ட பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.2216.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் இந்த துறைக்கு ரூ.2002.72 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
இந்த பட்ஜெட் மூலம் அதிக பயனடைய உள்ளது மத்திய விளையாட்டு ஆணையம் தான். மத்திய விளையாட்டு ஆணையத்துக்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.395 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி ஆண்டில் ரூ.450 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு கட்டமைப்புகள் மேம்பாடுக்கு இந்த நிதி பயன்படும் என கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களின் ஊக்கத்தொகைக்கு என ரூ.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இது ரூ.63 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில், விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை மற்றும் விருதுகளுக்கு என ரூ.411 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டை விட ரூ.94.07 கோடி அதிகம் என கூறப்படுகிறது.
கேலோ இந்தியா விளையாட்டு வளர்ச்சிக்கு ரூ.601 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.50.31 கோடி அதிகம் ஆகும்.