டெல்லி : 2020ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விளையாட்டுக்கு 2826.92 கோடி ஒதுக்கப்பட்டது. 2019-20 பட்ஜெட்டை விட கூடுதலாக 50 கோடி விளையாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில், விளையாட்டுக்கு இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், விளையாட்டு மேம்பாட்டுக்காக செயல்படும் கேலோ இந்தியா அமைப்புக்கு கடந்த நிதி ஆண்டை விட கூடுதலாக 291.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேறு சில விளையாட்டு அமைப்புகளுக்கு நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு கடந்த நிதி ஆண்டில் 300.85 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை 245 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 55 கோடி குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை 111 கோடியில் இருந்து 70 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு கடந்த நிதி ஆண்டில் 615 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி 77.15 கோடியில் இருந்து, 50 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மி பாய் தேசிய உடற்பயிற்சி கல்வி அமைப்பிற்கான நிதி கடந்த ஆண்டை விட 5 கோடி உயர்த்தப்பட்டு, 55 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் விளையாட்டுக்கு 2776.92 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2826.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 50 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.