டெல்லி: மத்திய பட்ஜெட்டில் இந்தாண்டு விளையாட்டு துறைக்கு இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2022- 2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

கடந்த நிதியாண்டில் விளையாட்டு துறைக்கு ரூ.2,757. 02 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தாண்டு புதிய உச்சம் தொட்டுள்ளது.
நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி இந்தாண்டு ரூ.3, 062.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை விட ரூ.305.58 கோடி அதிகமாகும். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நடத்திய பதக்க வேட்டையின் காரணமாக இந்தாண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
மேலும் நடப்பாண்டில் உலகின் மிகவும் பிரபலமான காமன் வெல்த் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யவும் விளையாட்டு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கூடுதலாக பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டு தோறும் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்படும். கடந்தாண்டு ரூ.108 கோடியாக இருந்த நிதி, இந்தாண்டு ரூ.138 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான " Khelo India programm" திட்டத்திற்காக கடந்தாண்டு ரூ.879 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு ரூ.974 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.