ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கேமரூன் அணி வீரர்களுக்கு எதிராக புகார் கிளம்பியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த மாதம் 12ம்தேதி தொடங்கி இம்மாதம் 13ம்தேதிவரை பிரேசிலில் நடைபெறுகிறது. லீக் போட்டிகள் நிறைவடைந்து, நாக்-அவுட் போட்டிகள் தொடங்கியுள்ள சூழ்நிலையில், இதில் சூதாட்டம் நடந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கேமரூன் அணியும், குரோசியாவும் மோதிய லீக் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்த விசாரணையை கேமரூன் அணியின் கால்பந்தாட்ட சம்மேளனம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து, அந்த சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஃபிஃபா சூதாட்ட பிரச்சினை குறித்து கேமரூன் கால்பந்தாட்ட சம்மேளனத்திடம் எதுவும் கேட்கவில்லை. இருப்பினும் நாங்கள் எங்கள் விசாரணையை துவக்கியுள்ளோம். கூடிய விரைவில் விசாரணை முடிவுக்கு வரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த கேமரூன், குரோஷிய அணியுடன் மோதிய போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில்தான் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதவிர கேமரூன் ஆடிய மற்ற போட்டிகளிலும் சூதாட்டம் நடந்துள்ளதா என்பதையும் அந்த நாட்டு கால்பந்தாட்ட சம்மேளனம் விசாரணை செய்து வருகிறது.
கிரிக்கெட் சூதாட்டம் குறித்த சர்ச்சை அவ்வப்போது எழுவதும், வீரர்கள் சிக்குவதும் தொடர் கதையாகிவரும் நிலையில், கால்பந்தாட்ட போட்டியிலும் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.