கேரம் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற கீர்த்தனா.. தமிழக அரசு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கியது
சென்னை: கேரம் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை கீர்த்தனாவுக்கு தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. மாலத்தீவின் மாலே நகரில், டிசம்பர் 2 முதல் 6 வரை நடைபெற்ற ஏழாவது கேரம் உலகக் கோப்பை போட்டியில், இந்தியா பதக்க பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியது.
இதில், தமிழ்நாட்டின் எல். கீர்த்தனா, பெண்கள் ஒற்றையர், இரட்டையர், அணிகள் பிரிவுகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். இப்போட்டியில் 17 நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். கீர்த்தனா, சகநாட்டு வீராங்கனை காஜல் குமாரியை வீழ்த்தி பெண்கள் ஒற்றையர் உலக சாம்பியன் ஆனார்.

இரட்டையர் பிரிவில் கீர்த்தனா-காஜல் இணை தங்கம் வென்றது. கீர்த்தனா, காஜல், எம். கஸிமா, வி. மித்ரா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, மாலத்தீவை தோற்கடித்து தங்கத்தைப் பெற்றன. இது உலக கேரம் போட்டிகளில் இந்தியாவின் தொடர்ச்சியான ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியது. போட்டியை நடத்திய மாலத்தீவு, பெண்கள் அணி பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
இதே போன்று மற்றொரு தமிழக வீராங்கனையான எம். கஸிமா தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும், மித்ரா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களையும் கைப்பற்றினர். குடும்பச் சூழ்நிலை காரணமாக, அரசு வேலை மற்றும் வீடு வேண்டி சென்னை திரும்பியதும் கீர்த்தனா கோரிக்கை விடுத்தார். இவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 1.5 லட்சம் நிதியுதவி ஏற்கனவே அளித்தார். இதே போன்று தங்கப் பதஙககம் வென்ற காஸிம்மாவுக்கு 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. கேரம் வீராங்கனைகளுக்கு தமிழக அரசு அளித்துள்ள இந்த பம்பர் பரிசு விளையாட்டு ஆர்வலர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications