ஜலந்தர்: தனது 100வது வயதில் மாரத்தான் போட்டியை ஓடி முடித்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மூத்த தடகள வீரர் ஃபௌஜா சிங் (114), பஞ்சாபில் நடந்த சாலை விபத்தில் திங்களன்று காலமானார். "தலைப்பாகை சூறாவளி" (Turbaned Tornado) என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட ஃபௌஜா சிங், தனது சொந்த ஊரான பியாஸ் கிராமத்தில் சாலையைக் கடந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
1911 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி, ஒரு விவசாயக் குடும்பத்தில் நான்கு பிள்ளைகளில் இளையவராக ஃபௌஜா சிங் பிறந்தார். குழந்தை பருவத்தில் மிகவும் பலவீனமாக இருந்த அவர், ஐந்து வயது வரை நடக்கவே சிரமப்பட்டதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். பண்ணை வேலைகள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவால் அவர் மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினார்.

1993 ஆம் ஆண்டு, தனது மனைவி கியான் கவுரின் மறைவுக்குப் பிறகு, இங்கிலாந்தில் உள்ள தனது மகன்களில் ஒருவருடன் வசிக்கச் சென்றார். அங்குதான், தனது 89வது வயதில், துக்கத்திலிருந்து மீள்வதற்காக ஓட்டப்பயிற்சியை ஒரு பொழுதுபோக்காகத் தொடங்கினார். பின்னர், மாரத்தான் பயிற்சியாளர் ஹர்மந்தர் சிங்கின் வழிகாட்டுதலின் கீழ், 2000 ஆம் ஆண்டில் தனது முதல் லண்டன் மாரத்தானில் பங்கேற்று, 6 மணி 54 நிமிடங்களில் ஓடி முடித்தார். இது மூத்தோர் பிரிவில் முந்தைய உலக சாதனையை விட 58 நிமிடங்கள் குறைவாகும்.
2000 முதல் 2013 வரையிலான தனது 14 ஆண்டுகால தடகள வாழ்க்கையில் மொத்தம் ஒன்பது முழு மாரத்தான்களை ஓடியுள்ளார். 2011 ஆம் ஆண்டு, தனது 100வது வயதில், டொராண்டோ வாட்டர்ஃபிரண்ட் மாரத்தானை 8 மணி 11 நிமிடங்களில் ஓடி முடித்து, முழு மாரத்தானை நிறைவு செய்த உலகின் மிக வயதானவர் என்ற பெருமையைப் பெற்றார்.
அவரது இந்த அசாத்திய திறமையால், அடிடாஸ் நிறுவனத்தின் "முடியாதது ஒன்றுமில்லை" (Impossible is Nothing) என்ற விளம்பரப் பிரச்சாரத்தில், குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மற்றும் கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் ஆகியோருடன் இடம்பிடித்தார்.
இது எப்படி சாத்தியமானது? என அப்போது கேட்டபோது பண்ணையில் விளைந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பருப்பு லட்டு, உலர் பழங்கள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர் ஆகியவைதான் தனது வலிமை மற்றும் ஆற்றலுக்கான ரகசியம் என்று அவர் கூறுவார்.
உலகம் முழுவதும் உள்ள பலருக்கு உத்வேகமாக விளங்கிய ஃபௌஜா சிங்கின் மறைவு, அவரது ரசிகர்களுக்கும், தடகள உலகிற்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது விடாமுயற்சியும், சாதனைகளும் என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும்.